Share via:
எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் போரின் காரணமாக இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் குழந்தைகள் அதிகளவில் உயரிழந்துள்ளதாகவும், 10நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
பல்வேறு நாட்டினர் ஐ.நா. சபையில் கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் நாடு ஏற்க மறுத்ததோடு, ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும்வரை இந்த போர் ஓயாது என்று உறுதியாக தெரிவித்தது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட் போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘காசாவில் ஹமாசுக்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வந்துவிடும். காசாவின் வடக்கு முனையில் ஹமாசின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்து வருகின்றனர். சரண் அடைபவர்களின் உயிர்கள் காக்கப்படும். அதேபோல் ஹமாஸ் அமைப்பின் சீனியர் கமாண்டர்கள், பயங்கரவாதிகள் ஆகியோர் ஒன்று சரணடைய வேண்டும் இல்லையேல் உயிரை விட வேண்டும். இதைதவிர்த்து 3வதாக எந்த வாய்ப்பும் இல்லை என்று யோவ் காலன்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.