Share via:
தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகை தந்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைதியான முறையில் தேர்தலை நன்முறையில் நடத்தி முடித்திட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒன்று இணைந்து செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக 1.50 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த வாக்குச்சாவடிகளில் கையில் துப்பாக்கி ஏந்தியபடி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதோடு தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணியில் 200 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரசாரத்துக்காக பல முக்கிய பிரமுகர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து வரும் நிலையில், வருகிற 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 8வது முறையாக தமிழகத்திற்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் சரியாக 6 நாட்களே உள நிலையில், தமிழகம் முழுவதும் இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.