Share via:
2024 தேர்தலில் பிரேமலதா யாருடன் கூட்டு வைப்பார் என்பது பெரிய
சஸ்பென்ஸ் ஆக இருந்தது. பா.ஜ.க.வின் மோடியில் இருந்து அண்ணாமலை வரையிலும் விஜயகாந்தை
பாராட்டி பேசிக்கொண்டு இருந்ததால் அங்குதான் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் ராமதாஸ் இணைந்ததால், அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டார் பிரேமலதா.
இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும்
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரேமலதா. அந்தவகையில் ஶ்ரீபெரும்புதூர் மக்களவைத்
தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து பேசியபோது, ‘பாஜகவுடன் கூட்டணி
வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது
என மிரட்டினார்கள். அப்படி செய்தால் தேமுதிகவின் வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது.
பா.ஜ.க.விலிருந்து எங்களுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள். ஆனால்,
நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். இதையெல்லாம் மீறித்தான்
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை ஜெயலலிதா போல் எடுத்தேன்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டுவந்ததாக சொல்கிறார்
உதயநிதி. பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் நம்முடன் இல்லாததற்கு கையெடுத்துக் கும்பிட
வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
பிரேமலதாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் விளக்கமோ கண்டனமோ வரவில்லை
என்பதைப் பார்க்கும்போது, நிஜமாகவே மிரட்டினார்களோ என்றே தோன்றுகிறது.