Share via:
பா.ஜ.க. விவிபாட் இயந்திரத்தில் மோசடி செய்தே ஜெயித்துவருகிறது
என்று தொடர் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை
100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட
வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார்
அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு
விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்,
கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப
ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
எனவே, மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்,
கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும்
நிராகரிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க
இந்திய தேர்தல் ஆணையம் தேவையான முடிவுகளை எடுக்கலா
பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய
நடைமுறையே சரியாக தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை”
என்று நீதிபதிகள் கூறினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகளை, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு
வழிவகுக்கும். தேர்தல்
முடிவுகளை அறிவித்த பின் 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும்.
முடிவுகளை
அறிவித்த பின் வாக்குபதிவில் குளறுபடி என்றுக் கூறி வேட்பாளர்கள் யாராவது இயந்திரத்தை
சரி பார்க்க விரும்பினால் அவர்களிடம் தேர்தல் ஆணையம் கட்டணம் வாங்கிக்கொண்டு சோதனை
செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணத்தை
திருப்பி தர வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலாரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம்
தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியிருக்கிறது.
’விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச
நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை “எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது
உச்ச நீதிமன்றம்’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பிஹார் மாநிலம் அராரியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்
பேசிய பிரதமர் மோடி, “இன்று நமது ஜனநாயகத்துக்கு ஒரு மகத்தான நாள். மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் குறித்து குறைகூறி வந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் இன்று கடுமையாக அறைந்துள்ளது
உச்ச நீதிமன்றம். அவர்கள் எல்லோரும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
நமது ஜனநாயகம் மற்றம் தேர்தல் முறை குறித்து உலகமே பாராட்டி வரும் வேலையில், அவை குறித்து
சொந்த நலனுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன” என்று தெரிவித்தார்.
அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.