Share via:
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு
அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல சாதனை படைத்திருக்கிறார்ள். இந்த நிலையில், பன்னிரெண்டாம்
வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும்
நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரையும்
முதல்வர் ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த மதிப்பெண் பட்டியலில் திருப்பூர் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது.
மேலும், அரசுப் பள்ளி அளவிலும் திருப்பூர் மாவட்டமே தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.
இதன் சதவீதம் 97.45 ஆகும். கடந்த ஆண்டு 2-து இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக
2019, 2020-ம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. நடப்பு ஆண்டும் முதல்
இடம் பிடித்ததால் 3 முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் மாவட்டம்
பெற்றுள்ளது.
மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை
சிறைவாசிகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை
மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை சிறைவாசிகள் எழுதினர். இதில் 15 பேரும் தேர்ச்சி
அடைந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100% தேர்ச்சி
அடைந்துள்ளனர். நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
சிறைத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன்
என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், சிறைவாசியான அலெக்ஸ் பாண்டியன் என்பவர்
532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்கள்
எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.