Share via:
சென்னை குதிரைப்படை கடந்த 1780ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண
ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
பின்னர் 1800ம் ஆண்டு முதல் இந்த படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்கானிப்பாளர்
வால்டர் கிராண்ட் மூலம் சென்னை காவல் துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு
சார்ஜண்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு
வந்தது. அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது சென்னை பெருநகர காவல் குதிரைப்படை
சென்னை எழும்பூரில் இயங்கிவருகிறது.
காவல் துறையின் குதிரைப்படைப் பிரிவை மேலும் வலிமைப்படுத்தி
வளர்த்தெடுக்கவும், இதனை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்
ஒரு குதிரையேற்றப் போட்டி நடத்துவதற்கு சென்னை பெருநகர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் முதன்முறையாக பிப்ரவரி இறுதியில், ‘ஃபர்ஸ்ட்
கிரேட்டர் சென்னை போலீஸ் இகொஸ்ட்ரின் சேம்பியன்ஷிப் 2024’ எனும் குதிரையேற்றப் போட்டி
நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டு பணிகளுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ்
அறக்கட்டளை சார்பில் 5 லட்சத்திற்கான காசோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்
ராய் ரத்தோருக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது விளையாட்டுத்துறை
செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
போட்டியின் நோக்கம் வெற்றி அடையட்டும்.