Share via:
ஒரே ஒரு தொகுதியில் நிற்பதற்கு தனிச்சின்னம் ஒதுக்க முடியாது என்று
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம், திருமா இரண்டு தொகுதியில்
நின்றாலும் புதிய காரணம் சொல்லி பானை சின்னத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் தங்களுக்கு பொது சின்னமாக பானை சின்னம் ஒதுக்க
கோரி தேர்தல் ஆணையத்தில் திருமா மனு அளித்திருந்தார், இதற்கு, ‘கடந்த 2 பொதுத் தேர்தல்களில்
குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே பொது
சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க இயலாது’ என்று ஆணையம்
கடிதம் அனுப்பியது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.சி.க. வழக்கு தொடர்ந்தது.
2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் முறையே 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத வாக்குகள்
பெற்றதாக தெரிவித்திருந்தது. எனவே விடுதலை சிறுத்தைகளுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு
செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன் கட்சியின்
நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல்
ஆணையம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட வி.சி.க.
திட்டமிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனைத் தாண்டி நீதிமன்றம் எதுவும் செய்ய
இயலாது என்பதால் வேறு என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். திருமாவளவன், ரவிக்குமார்
ஆகியோருக்கு வெவ்வேறு சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறப்படுவதால் கடந்த தேர்தல் போன்று
ரவிக்குமாரை மட்டும் உதயசூரியனில் நிற்க வைத்துவிட்டு, திருமாவை சுயேட்சை சின்னத்தில்
நிறுத்த ஆலோசிக்கப்படுகிறது.
இரண்டு பேருக்கும் பொதுவாக சின்னம் கிடைத்தால் மட்டுமே இருவரும்
நிற்பார்களாம், இல்லையேல் ரவிக்குமாருக்கு உதயசூரியனே மீண்டும் சின்னமாக இருக்கும்.