Share via:
இது பா.ஜ.க.வுக்கான தேர்தல் என்ற போட்டி முழுமையாக மாறி இப்போது
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேரடியாக மல்லுக்கட்டு நடக்கிறது. இதுவரை இல்லாத
அளவுக்கு ஆக்ரோஷமாக ஸ்டாலின் பேசுவதை தி.மு.க.வினரே ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்,
கூட்டணியில் இருந்து விலகிவிட்டாலும் பா.ஜ.க. அரசை எடப்பாடி பழனிசாமி
விமர்சிக்க மாட்டார். ஏனென்றால், அவருடைய ஊழல் குடுமி பா.ஜ.க. கையில் இருக்கிறது என்று
ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி, ’நான் மோடியை பார்த்து
பயப்படுவதாக ஸ்டாலின் கூறுகிறார். காரணம் கேட்டால், நான் மத்திய அரசை எதிர்ககவில்லையாம்.
இது என்னய்யா புதுக்கதையாக இருக்கிறது. நாங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம்.
நாங்கள் எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும்? ஆட்சியில் இருப்பவர்கள் தான் எதிர்க்க
வேண்டும்’ என்று கிண்டல் செய்தார்.
இதற்கு வேலூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், ’எதிர்கட்சியாக
இருக்கும் நாங்கள், பாஜகவை எப்படி எதிர்க்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று
கூறினார். ஆனால், முன்பு ஆளுங்கட்சியாக தானே இருந்தார். அப்போது என்ன செய்தார்? பாஜக
கொண்டு வந்த சட்டங்களையும் அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு கொடுத்தாரே..
அவரது வீரத்தை தமிழ்நாடே பார்த்திருக்கிறது. ஆனால் திமுக அப்படி அல்ல. எதிர்க்கட்சியாக
இருந்த போது, பாஜகவின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடினோம்’ என்று நேரடியாக
தாக்குதல் நடத்தினார்.
அதோடு, ‘கன்னித்தீவு கதை கூட ஒருநாள் முடிவுறலாம். ஆனால், அதைவிட
மர்மங்கள் நிறைந்தது எழுதித் தீராது அ.தி.மு.க.வின் ஊழல்கள்! ஊழலில் திளைத்து – பதவி
சுகத்துக்காகத் தமிழ்நாட்டை அடகு வைத்த பழனிசாமியால் ஒருபோதும் மக்கள் விரோத பா.ஜ.க.வை
எதிர்க்க முடியாது. அவரது ஊழல் குடுமி பா.ஜ.க.வின் பிடியில்! நாட்டின் சமத்துவம் –
சகோதரத்துவம் – மதச்சார்பின்மை – பன்முகத்தன்மை – அரசியல்சட்டம் உள்ளிட்ட உயரிய விழுமியங்களை
அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. வீழ்ந்தது’ என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார்.
பேசுவது நம்ம முதல்வர்தானா என்று தி.மு.க.வினரே ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.