Share via:
தேர்தலில் நின்ற நேரத்தில், ‘நான் என்னுடைய வெற்றிக்காக ஒரு ரூபாய்
கூட கொடுக்க மாட்டேன்’ என்று வீரவசனம் பேசினார் அண்ணாமலை. இதை கேட்டு மாஜி அமைச்சர்
செல்லூர் ராஜூ, ‘நாங்க தான் அண்ணாமலைக்கு கடந்த தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்
கொடுத்தோம்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த நிலையில், கோவையில் வாக்காளர்களுக்கு கொடுத்த பா.ஜ.க. பிரமுகர்
வருமான வரித்துறையினரிடம் சிக்கியிருக்கிறார். ஆலந்துறை பா.ஜ.க. மண்டல் தலைவர் ஜோதிமணி
வைத்திருந்த 81 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை பூலுவப்பட்டியில்
தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம்
தர முயற்சி செய்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பா.ஜ.க.வினர் பணம் தருவதாக ரகசிய தகவல் கிடைத்ததை
அடுத்து பறக்கும் படையினர் விரைந்தனர். தேநீர் கடையில் வைத்து பா.ஜ.க. பிரமுகரை தேர்தல்
பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட பா.ஜ.க. பிரமுகர் ஜோதிமணியிடம்
பணம் மற்றும் வாக்காளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணாமலையும் பணம் கொடுக்கத்தான் சொல்கிறார் என்றால், இவர் எப்படி மாற்றம் கொண்டுவருவார்
என்று மக்களே கேள்வி எழுப்புகிறார்கள். அதோடு, ‘உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய
மாட்டோம்’ என்று அண்ணாமலை பேசிய வீர வசனமும் தமிழகம் முழுக்க ட்ரெண்ட் ஆகியுள்ளது.