Share via:
பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கடுமையாக தாக்குதல்
நடத்திவரும் முதல்வர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார்.
திருவண்ணாமலையில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப்
பேசிய ஸ்டாலின், “10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து
மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், எந்த பதிலும் இல்லை..
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
அதுகுறித்து நக்கலாக பதில் சொல்கிறார் நிர்மலா சீதாராமன். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை
பிச்சை என்று கூறினார். இது மாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை மோடி அமைச்சராக வைத்திருக்கிறார்.
ஆணவ சிந்தனை கொண்ட நிர்மலா சீதாராமன் 5000 கோடி கொடுத்துவிட்டோம்.. அதற்கு கணக்கு எங்கே
என்று கந்துவட்டிக் காரர் போல பேசியுள்ளார்.
சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன்
அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். தெளிவாக சொல்கிறேன்.
ஏடிபி, கேஎஃப்டபிள்யூ (KfW) போன்ற வெளிநாட்டு அமைப்புகளிடம் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால்
அது ஒன்றிய அரசின் வங்கிக் கணக்குக்கு சென்று அதன்பிறகுதான் மாநில அரசின் வங்கிக் கணக்குக்கு
டிரான்ஸ்பர் ஆகும். அப்படி மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்?
அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாக சொல்வது எந்த வகையில் நியாயம்? பொய் சொன்னாலும்
பொருந்தச் சொல்லுங்கள் நிர்மலா சீதாராமன் அவர்களே.
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில
அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன்,
பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.
நாங்கள் வெள்ள நிவாரணத்திற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில்
இருந்து பணம் கேட்கிறோம். ஆனால், பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும்
வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி
கொடுத்தோம் என்று கூறுவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அதுதான் இது என்ற வாழைப்பழ
காமெடியை நினைவூட்டுகிறது” என்றும் விமர்சித்தார்..