Share via:
இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பிரக்ஞானந்தா
வாழ்த்து பெற்றார். இப்படி வாழ்த்து பெற்ற நேரத்தில் பிரக்ஞானந்தாவுடன் விஜய் விளையாடத்
தொடங்கினார்.
இதுகுறித்து பேசும் பிரக்ஞானந்தா, ‘’முதல்வர் விஜய்யுடன் நான்
செஸ் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. போர்டு கொண்டுவரச்சொன்னார். அவர் நன்றாக
விளையாடினார். இறுதியாக நானே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன் என்றாலும் முதலமைச்சர்
நன்றாக விளையாடினார், அவர் இப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது’’ என்று கூறியிருக்கிறார்.
விஜய் செஸ் விளையாட்டு இப்போது வைரலாகியுள்ளது. அதேநேரம், பிரக்ஞானந்தா
வெற்றி குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்த உயர்தர செஸ் தொடரின் இறுதிச்
சுற்றில், 20 வயது பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக
நடைபெற்ற இப்போட்டியில் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிச் சுற்றுக்கு முன்னதாக பிரக்ஞானந்தா, வெஸ்லி சோ மற்றும் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகிய
மூவருக்கு இடையே சாம்பியன் பட்டத்திற்கான கடும் போட்டி நிலவியது. மற்றொரு போட்டியில்
வெஸ்லி சோ, ஃபிரோஸ்ஜாவை அர்மகெடான் முறையில் வீழ்த்தினார். ஆனால், பிரக்ஞானந்தா கிளாசிகல்
முறையில் முழுப் புள்ளிகளைப் பெற்றதால் வெஸ்லி சோவால் அவரை முந்த முடியவில்லை. மற்றொரு
போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியன் டி.குகேஷை வீழ்த்தி 4வது இடத்தைப் பிடித்தார்.
மீண்டெழுந்து படைத்த உலக சாதனை இத்தொடரின் நடுப்பகுதியில் சில தோல்விகளால் பிரக்ஞானந்தா
பின் தங்கியிருந்தார்.
ஆனால், அதன் பிறகு அசத்தலாக மீண்டெழுந்த அவர், அலிரேசா ஃபிரோஸ்ஜா,
மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் என உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக தொடர்ச்சியாகக்
கிளாசிகல் போட்டிகளில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். குறிப்பாக, 9வது சுற்றில்
குகேஷுக்கு எதிராகப் பெற்ற வெற்றி அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இத்தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை கிளாசிகல் போட்டிகளில்
பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஒரே தொடரில் கார்ல்சனை இரண்டு முறை
வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, இரண்டாவது வீரர் என்ற சாதனையை
அவர் படைத்துள்ளார். மேலும், 2026 ஆம் ஆண்டில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய முதல்
வீரரும் இவரே ஆவார்.
சென்னையைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா, ஏற்கனவே கேண்டிடேட்ஸ்
தொடருக்குத் தகுதி பெற்று உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தற்போது
நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தையும் தனது கணக்கில் சேர்த்து இந்திய செஸ் விளையாட்டின்
புதிய பொற்காலத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
