Share via:
இஸ்ரேல்& ஹமாஸ் போர் விளைவாக காசாவில் இதுவரை 4,104 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் தொடங்கி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலில் காசாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் 4,104 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காசா குழந்தைகளின் மயானமாக மாறி வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்ததுடன், உடனடியாக போரை நிறுத்துங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் சென்று சேர்வதை உறுதி செய்யவும், பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டெடுக்கவும் காசாவில் அவ்வப்போது திட்டமிட்டு சற்றே லாவகமாக தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே கூறியபடி போர் நிறுத்தம் என்பதற்கு வாய்ப்பு கிடையாது. போர் முடிந்த பிறகு காசாவை முழுக்கட்டுப்பாட்டுக்குள் சில காலம் எடுத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.