Share via:
திருவள்ளுவருக்கு காவி பூசி மத அடையாளம் கொடுத்தது தொடர்பாக திமுக அரசு தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது.
திராவிட மாடல் என்ற பெயரில் திமுக அரசு இயங்கி வருகிறது. இதற்கிடையில் சனாதன பேச்சு குறித்த விவகாரமும் ஓய்ந்தபாடில்லை. இருப்பினும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்திப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் இடங்களில் எல்லாம் சனாதனம் குறித்த தனது நிலைப்பாட்டை பதிவு செய்வதோடு, திமுக அரசுக்கு எதிரான கோட்பாடுகளையும் விதைத்து வருகிறார்.
உலகத்திற்கே நல்வழியை காட்டும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு தற்போது காவி உடையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது மத்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே நடந்துள்ளது என்று திமுக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சனாதன சர்ச்சை முடிக்கு வராத நிலையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது மத்திய மற்றும் தமிழக அரசுக்கு இடையே இருக்கும் விரிசலை இன்னும் பெரிதாக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.