Share via:
வழக்கமாக தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைப்பது தான் பா.ஜ.க.வின் தேர்தல் டெக்னிக். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் புதிய டெக்னிக்கை மோடி அரசு கையாளத் தொடங்கியுள்ளது.
குஜராத்தின் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் போலி சாட்சிக் கையெழுத்து என்று காரணம் காட்டி அவரை நிராகரித்தனர். அது மட்டுமின்றி மீதமுள்ள அத்தனை வேட்பாளர்களையும் கட்டாயப்படுத்தி வாபஸ் வாங்க வைத்ததால், அங்கு தேர்தல் நடத்தாமலே பா.ஜ.க. வேட்பாளர் எம்.பி. ஆகிவிட்டார்.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அக்ஷய் கண்டி பாம் என்பவர் வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளுக்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு தாவிவிட்டார். இதுவும் நெருக்கடி கொடுத்தே சாதித்திருக்கிறார்கள்.
அதேபோல் அமித் ஷா போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை எல்லாம் மிரட்டும் பணியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பணத்தாசை, மிரட்டல் காட்டி ஆள் பிடிக்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கியிருப்பதைக் கண்டு இண்டியா கூட்டணி அதிர்ந்து நிற்கிறது என்பதே உண்மை.