Share via:
மத்திய பா.ஜ.க. அரசின் அடியாட்கள் போலவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியில் இப்போது தேர்தல் கமிஷனும் சேர்ந்திருப்பது ஜனநாயக நம்பிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
பொதுவாக தேர்தல் பிரசாரத்தில் மதம், ஜாதி துவேஷம் குறித்து பேசக்கூடாது என்பது விதிமுறையாக இருக்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறி வைத்து பேசி வருகிறார்.
இந்துக்களின் சொத்துக்களை எல்லாம் பறித்து முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் கொடுக்கப்போகிறது என்றும் முஸ்லீம்கள் நிறைய பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் நேரடியாகவே தாக்குதல் நடத்தினார். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்குக் கொடுக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் முஸ்லீம்களுக்கு எதிர்ப்பாக தெலுங்கானா மாநில தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் மோடி. அதாவது இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்குக் கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. மோடி உயிருடன் இருக்கும் வரை அதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார்.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடுக்கு அனுமதிக்க மாட்டேன் என்று இப்போது தேவையே இல்லாமல் மோடி பேசியிருப்பது நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்துக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி முஸ்லீம்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது சரிதானா… இதை தேர்தல் கமிஷனும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா..?
மக்களே விடை சொல்லட்டும்.