Share via:
இந்துக்கள் நிறைந்த பகுதியில் இஸ்லாமியர்கள் பற்றிய வெறுப்புணர்வுடன்
பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் அவர்களுக்கு ஆதரவாளர்
போன்று மாற்றிப் பேசியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
ராஜஸ்தானில் மோடி, `காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின்
செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள்
இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது’
என பேசியிருந்தார்.
’ஒரு பிரதமராக இருந்துகொண்டு அதிகாரத்துக்காக மக்களின் மத உணர்வுகளைத்
தூண்டுவது தரம் தாழ்ந்த செயல். அப்பட்டமான வெறுப்புப் பேச்சு’ என எதிர்க்கட்சிகள் ஆவேச
குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக
வாழும் அலிகாரில் நடந்த பேரணியில் பேசிய மோடி, `செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும்,
ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என்று இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு ஏற்கனவே
கூறிய வாக்கியத்திலிருந்து இஸ்லாமியர்களைக் குறிக்கும் வார்த்தையினை மட்டும் தவிர்த்துவிட்டு,
`மக்களின் சொத்துக்களை மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது’ என்று உரையாற்றினார்
பிரதமர் மோடி. மேலும், `காங்கிரஸும், சமாஜ் வாதியும் இஸ்லாமிய சமூகத்தின் சமூக-பொருளாதார
நிலையை உயர்த்த எதுவும் செய்யவில்லை. முத்தலாக் காரணமாக பல மகள்களின் வாழ்க்கை சீரழிந்தது.
அதற்கு எதிராகச் சட்டம் இயற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றினோம்.
முன்பு, ஹஜ் புனித யாத்திரைக்கான ஒதுக்கீடு குறைவாக இருந்ததன்
காரணமாக, நிறைய சண்டைகள் இருந்தன, லஞ்சமும் பரவலாக இருந்தது. செல்வாக்கு மிக்கவர்களுக்கு
மட்டுமே ஹஜ் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், இந்தியாவிலுள்ள நமது இஸ்லாமிய சகோதர,
சகோதரிகளுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரிடம்
கோரிக்கை விடுத்திருந்தேன். இன்று, இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
விசா விதிகளும் எளிதாக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், முன்பு நம் இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் `மெஹ்ரம்’
(ஆண் துணை) ஹஜ்ஜுக்கு இல்லாமல் தனியாகச் செல்ல முடியாது. ஆனால், எங்கள் அரசாங்கம் பெண்களை
மெஹ்ரம் இல்லாமல் ஹஜ் செல்ல அனுமதித்தது’ என்று பேசியிருக்கிறார்.
இந்துக்களின் பாதுகாவலன் போன்று பேசிய மோடி இஸ்லாமியர்களிடம் பல்டி
அடித்துப் பேசியிருப்பது இந்து ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.