Share via:
17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில்,
யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கலசங்களில் எடுத்து சென்று கோபுரங்கள்
மீது ஊற்றினர் சிவாச்சாரியார்கள். ஒரே நேரத்தில் 12 கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி
வழிபாடு செய்யப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு வாசல்களில் இருந்தும் தரிசனம்
செய்தார்கள். இந்த நிலையில் விஜய்யின் வாழ்த்து செய்தி இந்துக்களுக்கு பெருமகிழ்ச்சி
கொடுத்துள்ளது.
விஜய்யின் வாழ்த்துச் செய்தியில், ‘’தமிழர்களின் ஆன்மிகம், கலை,
பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி
நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப்
பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும்,
நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும்
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது
வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! நமது தொன்மையான திருக்கோயில்களையும்
அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை
வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த குடமுழுக்கு குறித்து அமைச்சர் ரமேஷ், ‘’மதுரை அருள்மிகு
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, 17 ஆண்டுகளுக்குப்
பின்னர் நடைபெறுவது ஆன்மிகப் பெருமை மட்டுமல்ல; நமது திருக்கோயில் தமிழர் மரபின் தொடர்ச்சியைப்
போற்றும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப்
விஜய் அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும், இவ்விழாவை சிறப்பான ஏற்பாடுகளுடன் வெகு விமரிசையாக
நடத்துவதற்கு பெரும் துணையாக அமைந்துள்ளது.
மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் அருளால் தமிழ்நாடு மக்கள் அனைவரும்
அமைதி, ஆரோக்கியம், வளம் மற்றும் மகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன். நமது கோயில்களின் சிறப்பையும்
தொன்மையையும் போற்றி, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கொண்டு செல்வோம்…’’
என்று கூறியிருக்கிறார்.
மதுரை முழுக்க விழாக்கோலம். குடமுழுக்குக்கு தவெக அரசு நல்ல வசதி
செய்துகொடுத்துள்ளது என்று விஜய்யை மக்கள் பாராட்டியுள்ளனர்.

