Share via:
ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் ஓட்டல்களில் தங்கும் அறைகள் மற்றும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இந்தியா தான் விளையாடிய எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி முகத்தோடு நடைபோட்டு வருகிறது.
முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவை நாளை (நவ.20) 2 மணியளவில் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
1.20 லட்சம் பேர் பார்க்கும் அளவுக்கு பெரிய அளவிலான நரேந்திரமோடி மைதானத்தில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்து போட்டிகளை பார்க்க வருகை தர உள்ளனர். சாதாரண நாட்களில் 12 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.16 ஆயிரமாக இருந்து வந்த விமானக்கட்டணம் தற்போது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அகமதாபாத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஓட்டல் அறைகளின் வாடகை 5 மடங்காக அதிகரித்துள்ளது. 5 ஸ்டார் ஓட்டல்களில் 2 இரவுகள் தங்குவதற்கான கட்டணம் ரூ.50 ஆயிரம் என்று வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகளில் ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று இந்திய அணி வெறித்தனமாக விளையாட உள்ளது. அதேபோன்று சொந்த மண்ணிலேயே இந்தியாவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியா அணியும் தனது முழு திறமையையும் காட்ட உள்ளது. எனவே நாளை கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாதான். மதியம் 2 மணிக்கு தொலைக்காட்சிக்கு முன்பு உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாமல் போட்டியில் லயித்து போய்விடுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.