Share via:
உள்துறையை பொறுப்பில் வைத்து இருக்கும் முதலமைச்சர் விஜய், தனக்கு
கீழே பணியாற்றும் காவல் அதிகாரிகள் தான் 41 பேர் சாவுகளுக்கு காரணம் என்று பொதுவெளியில்
குற்றம் சாட்டியிருக்கும் சம்பவம் அதிர வைத்துள்ளது. இது உண்மை என்றால் சம்பந்தப்பட்ட
போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசும் திமுகவினர், ‘’கரூர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது
அரசின் தலைவராக உள்ள முதல்வர் விஜய், ’போலீஸ் அலர்ட் செய்யவில்லை” என சொல்லி இருப்பது
வழக்கின் போக்கை விசாரணைக்கு முன்பே மாற்றுவது போல ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
கரூர் அசம்பாவிதத்திற்கு கரூர் காவல்துறையே காரணம்.. தேசிய நெடுஞ்சாலைக்கே வந்து தன்னை
ஊருக்குள் அழைத்துச்சென்றது எல்லாம் சதி என்ற ரீதியில் விஜய் பேசியிருக்கிறார்.
உண்மையில் விஜய் தாமதமாக வந்ததே கரூர் சம்பவத்திற்கு காரணம். ஆனால்,
கரூரில் அசம்பாவிதம் நிகழவேண்டுமென்ற நோக்கத்தோடு
தீட்டப்பட்ட அரசியல் சதிக்கு கரூர் போலீஸார் உதவி செய்தனர் என்று முதலமைச்சருக்கு யார்
சொன்னது? தமிழ்நாட்டின் காவல்துறை தலைவரா? உளவுத்துறை தலைவரா? உள்துறை செயலாளரா? விசாரணை
அதிகாரியாக இருந்த அஸ்ரா கார்க்கா? தற்போதைய கரூர் காவல்கண்காணிப்பாளரா? அல்லது வழக்கை
விசாரித்து வரும் சி.பி.ஐயா..?
காவல்துறை மூலமாக கரூரில் கொலை செய்தனர் என ஆதவ் அர்ஜூனா பேசிய
பேச்சை அப்படியே ஆமோதித்திருக்கிறார். இதற்கு அன்றைய தினம் கரூர் காவல் துறையில் பொறுப்பாக
இருந்தவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்..?
கூட்டம் அதிகமாக இருக்கிறது, இங்கேயே நின்று பேசுங்கள் என்று காவல்
துறை தடுத்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. விஜய் பேசும்போதே மயங்கிவிழுந்தவர்களை தூக்கிச்
சென்றதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. மரணம் பற்றி தெரியவந்ததும் தனது தொண்டர்களுக்கு ஆதரவு
தராமல் தப்பியோடியவர், இந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக இப்படி கூச்சமில்லாமல் பொய்
சொல்கிறார்’’ என்கிறார்கள்.
முதல்வர் விஜய் கூற்றின்படி, கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்றால்
அப்படியான சோதனை காலகட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்காக சிறை சென்ற மதியழகன் வேட்பாளரா…
கரூர் சம்பவத்துக்கு விஜய்தான் பொறுப்பு என குற்றம் சாடிய எம்.ஆர் விஜயபாஸ்கரா என்பது
தவெகவினர் கேள்வி.