Share via:
இன்று விஜய் பேசி முடிக்கும் முன்னதாகவே உதயநிதி வெளிநடப்பு செய்த
விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. சட்டமன்றத்தில் அமர்ந்து விஜய் பேசி முடித்ததும்
கேள்வி எழுப்ப வேண்டாமா என்று கேட்கிறார்கள்.
இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது
முதலமைச்சர் விஜய் பேசும் போது, டாஸ்மாக்கில் கடந்த காலங்களில் பார்ட்டி ஃபண்ட் என்ற
பெயரில் கொள்னையடித்தனர் என்று பேசினார். அதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் பேச திமுகவினர் அனுமதி கேட்டு முழக்கமிட்டதும்,
முதலமைச்சர் பேசிய பிறகு திமுகவினருக்கு அனுமதி
தருவதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனாலும் உதயநிதி வெளிநடப்பு செய்தார். வெளியே செய்தியாளர்களை
சந்தித்த உதயநிதி, ‘’சினிமா சூட்டிங் போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதை நாங்கள்
கேட்க வேண்டுமா? ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்துக்குப் போங்கள், நாங்கள் எதிர்கொள்வதற்குத்
தயாராக இருக்கிறோம்’’ என்று டென்ஷன் ஆனார்.
ஆனால் தவெகவினர் போன்று பேசும் சவுக்கு சங்கர், ‘’ஒரு முதலமைச்சர்.
முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார்.
அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில்
காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட
வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் பார்ட்டி ஃபண்ட் வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால்,
உதயநிதி பேசுகையில் பார்ட்டி ஃபண்ட் வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்.
அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை
சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும்,
கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல்
குணம். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை
கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்’’ என்று
கூறியிருக்கிறார்.
அதேநேரம், திமுகவினரோ உதயநிதி பட்டாஸாக வெடித்து அலற விட்டுள்ளார்
என்கிறார்கள். எப்படியோ தமிழக அரசியல் இப்போது விஜய், உதய் என்று மாறிவிட்டது.
