Share via:
தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்
1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள்
எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும்
83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண்
பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு
முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த
2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த
தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி
பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ்
2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி
பெற்றோர் எண்ணிக்கை 5161. (92.11%)
* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி
பெற்றோர் எண்ணிக்கை 115 (92%)
* இத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம்
பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சிவகங்கை, அரியலூர், கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மாநிலத்திலேயே திருவண்ணாமலை மாவட்டம் 90.47% பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த
மாவட்டத்தில் கல்வி தேர்ச்சி விகிதத்தைக் கூட்டும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்க
வேண்டும்.