Share via:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து
மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. தமிழகத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். இதன்மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு
நடந்துள்ளது.
கடந்த 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, தமிழகம் முழுவதும்
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 62 மையங்களில் பாதுகாப்பு அறைகளில் (‘ஸ்டிராங்
ரூம்’) வைக்கப்பட்டுள்ளன. இங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் 62 மையங்களில்
65 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 18 ஆயிரம்
போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநிலம் முழுவதும் சட்டம்
– ஒழுங்கைப் பாதுகாக்க சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் என 234 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களில் செய்யப்பட்டுள்ள
பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிவறை, ஒளி, ஒலி வசதிகள், மின் இணைப்பு தொடர்பாக
மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும்.
பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 அறைகள் அமைப்பு தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக
240 அறைகள் ஒதுக்கீடு. ஒவ்வொரு 500 தபால் வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை
அமைக்கப்பட்டுள்ளது மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமனம், 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும், உதவித்
தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக
மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின்
வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 மைக்ரோ அப்சர்வர்கள் துணையாக
இருப்பார்கள்.
ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதி செய்வதற்காக
அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன்
தொடங்கும். அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து
சட்டமன்றத் தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும்
அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும்.
இந்த முடிவுகள் ECINET செயலியிலும் பிரதிபலிக்கும். மேலும், முடிவுகளை இணையதளத்திலும்
பார்க்கலாம்.
தமிழ்நாடு யார் கையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் இருக்கும் என்பது
நாளை மதியம் 1 மணிக்குள் தெரிந்துவிடும்.
