Share via:
அமைச்சர்களின் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரித்து வருவதால், தன்னை அனைவரும் வில்லனாக பார்க்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அமைச்சர் ஐ.பெரியசாமி 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதன் பேரில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2012ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐ.பெரியசாமியின் மனுவை விசாரித்த நீதிபதி இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில்தான் இந்த வழக்கை நேற்று முன்தினம் (செப்.,7) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு கையில் எடுத்துள்ளார். இவ்விரு வழக்குகளையும் ஒரு சேர இன்று (செப்.,8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசும் போது, ‘‘கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை’’ என்று வேதனையுடன் தெரிவித்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பெரியசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.