Share via:
“மக்கள் பணத்தை தொடமாட்டேன். தொட்டா விடமாட்டேன். தொட்டவங்களையும்
விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய விஜய் இன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும்
இரண்டு விஜயபாஸ்கர்களையும் த.வெ.கவில் இணைத்துக்கொண்டார்.
சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்த பொழுது மாதா மாதம்
எம்.டி.எம். குட்காவிடம் 14 லட்சம் லஞ்சம் ரூபாய் பார்ட்டி ஃபண்ட் வாங்கினார் என்று
சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய்
35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை
தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள
கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. சேகர் ரெட்டியின்
எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார்
என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 2016- 21 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில்
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துசேர்த்ததாக
சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் விஜயபாஸ்கர், ‘’அதிமுக தலைமையின் தவறான முடிவாலும்
தவறான போக்காலும் இன்றைக்கு தவெகதான் ஒரு அருமையான களம் என்று மக்கள் மகாபலிபுரத்தில்
குவிந்துள்ளார்கள். இது மாபெரும் திருவிழா’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த விழாவிற்கும் விஜய் வரவில்லை என்பதிலிருந்தே இவர்கள் மீது
அவர் என்ன மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது.
இன்று கனிமொழி, ‘’வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’
ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு
மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?’’ என்று
கிண்டல் செய்திருக்கிறார்.