Share via:
திமுக ஆதரவுடன் என்னை முதல்வராக்குவதற்கு எந்த முயற்சியும் நடக்கவில்லை
என்று கூறிவந்த திருமாவளவன் முதன்முறையாக அப்படி ஒரு விஷயம் நடந்தது என்று வெளிப்படையாகப்
பேசியிருப்பது பெரும் அரசியல் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.
பேட்டியில் அவர், ‘’நாங்கள் தவெகவிற்கு ஆதரவுக் கடிதம் கொடுத்த
அதே நாள் மாலையிலேயே, என்னை முதலமைச்சர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி, அந்த ஆதரவை வாபஸ்
பெறச் சொல்லி திமுக, அதிமுக தரப்பில் இருந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.”
என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
மூன்று முறை அவர் திமுக தலைமையை சந்தித்ததில் இரண்டு முறை சதி
ஆலோசனை மட்டுமே நடந்திருக்கிறது. தவெக ஆட்சிக்கு வராமல் தற்காலிகமாக தடுக்க மட்டுமே
தன்னை முதல்வராக முன்மொழிகிறார்கள் என்று புரிந்த பின் சதி ஆலோசனைகளை புறந்தள்ளி இருக்கிறார்.
மே 12ம் தேதி, “திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை
அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை” என்று கூறியிருந்தார். அதே திருமா
நேற்றைய தினம், “அது ஒரு தரப்புல இருந்து வருது. இன்னார்னு குறிப்பா சொல்லனும்னு
அவசியம் இல்ல. ரிலையபிள் சோர்ஸ்…”, ’’முதலில் திமுக அதிமுக கூட்டு சேர்ந்து எடப்பாடிய
முதல்வராக்கலாமான்னு, திமுக தரப்புல கேட்டாங்க.. அப்படி நடந்தால் திமுக எதிர்காலம்
சூனியம் ஆகும் என்றேன்’’ என்றும் உறுதிபடச் சொல்கிறார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சமஸ், ‘’திருமாவளவன் எல்லா விஷயங்களையும்
தெளிவுபட பேசியிருக்கிறார். விஜய் முதல்வராவதைத் தடுக்க நடந்த முயற்சியில் டெல்லியுடன்
இணைந்து நகர்த்தப்பட்ட காய்கள்தான். அதுவும் ஒரு நாள் வெளியே வரும்.
தேர்தல் முடிவு வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு வரை, “பாஜகவின்
பி டீம்கள்” என்று அதிமுக, தவெகவையும், ‘பாஜக அடிமை’ என்று அதிமுக பொதுச்செயலாளரையும்
அழைத்தவர்கள் எப்படி இப்படி ஒரு திட்டத்தை தீட்டினார்கள்? எனில், பாஜகவின் உண்மையான
‘பி டீம்’ ஆக இங்கே செயல்பட்டவர்கள் யார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆக, திமுக கூட்டணி உடைகிறது. தவெகவின் கூட்டணியில் விசிக மனப்பூர்வமாக
இணையப்போகிறது.
