Share via:
தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதன்படி, ‘தாய் மாமன்
தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக’ தங்கம் வழங்கும் நிறுவனங்களாக ஜோயாலுக்காஸ்
மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி
தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 1 லட்சத்து
28,499 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை
வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’தவெக அரசின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்
அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22-ம் தேதி முதல், பிறந்த ஒவ்வொரு குழந்தையையும்,
தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்கம் மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இதில் ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41,667 தங்க மோதிரங்கள்
வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14-ல் தமிழக மருத்துவப்பணிகள்
கழகத்தால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
11 நிறுவனங்கள் தமிழ்நாடு டெண்டர்ஸ் போர்ட்டல் மூலமாக பங்கேற்று
தங்களின் விலைப்புள்ளி விவரத்தை தெரிவித்தனர். இதில் குறைந்த விலைப்புள்ளியை
வழங்கிய ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு
ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்திட்டமானது அண்ணா பிறந்த நாளான செப்.15-ம்
தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து 4 மாதங்களுக்கு தேவையான
ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக,
ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 70:30 என்ற
சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமானது, தமிழக அரசின் சுகாதாரச்
சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில்
மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில்பிறக்கும்
குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது..’’ என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பைசாவில் எப்படி மோதிரம் செய்ய முடியும் என்பதற்கு தவெகவினர்
விளக்கம் கொடுத்துல்ளனர், ‘’ஒரே நேரத்துல பல லட்சம் மோதிரங்கள் மெஷின் மூலம் தயாரிக்கும்
போது (Mass Production), ஒரு மோதிரத்துக்கான தயாரிப்புச் செலவு (Per unit Making
Cost) மிக மிகக் குறைவு. 755 கோடிக்கு நேரடி தங்கம் விற்பனை, தங்கத்தோட அசல் விலையை
அரசாங்கமே கொடுத்துடும். 4.4 லட்சம் மோதிரங்கள் ஒரே நேரத்தில் விற்பனை ஆகும்போது அது
நஷ்டமா? லாபமா? செய்கூலி, சேதாரம், டிரான்ஸ்போர்ட்னு சொல்லி மக்கள் பணத்தைச் சுருட்ட
விடாம, வெளிப்படையான முறையில் Reverse Bidding டெண்டர் எடுத்திருக்காங்க.
சுருக்கமா சொன்னா, அரசாங்கத்துக்கு மக்கள் வரிப்பணம் மிச்சம்.
மக்களுக்கு தரமான 1 கிராம் தங்க மோதிரம் இலவசமா சேருது. நிறுவனத்துக்கு ₹755 கோடி
வியாபாரமும் பிரம்மாண்ட பிராண்டிங்கும் கிடைக்குது’’ என்று விளக்குகிறார்கள்.
ஆனால், தங்க மோதிரம் திட்டமும் கார் திட்டமும் விஜய்க்கு சர்ச்சையைத்
தொடங்கியிருக்கிறது. இப்போதே உஷாராவது நல்லது.