Share via:
ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு
இயந்திரத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.
இதில் ஒரு மிஷின் பழுதாகியிருந்ததும், 2 வி.வி.பேட் செயல்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் 30 சதவீதம் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் அம்பலமாகி
உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து
போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட 8,795 வாக்குகள் வித்தியாசத்தில்
மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இதையடுத்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில்
பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல்
ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அதன்படி சிந்தாதிரிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
கடந்த 29ம்தேதி முதல் அதிகாரப்பூர்வமாக கடந்த 5 நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
4வது நாளில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட, ஒரு வாக்குப்பதிவு
இயந்திரத்தில் பழுது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு வி.வி.பேட் மிஷின்கள் செயல்படாததும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திமுக சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் 19 கேள்விகளை
எழுப்பி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
என்.ஆர்.இளங்கோ, ‘’கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 14 இயந்திரங்களை சரிபார்க்கக் கேட்டிருந்தோம்.
கடந்த 29ம்தேதி 2 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன, அதில் பிரச்னைகள் இல்லை. ஜூலை
30ம்தேதி எடுக்கப்பட்ட 2 இயந்திரங்களில், ஒரு இயந்திரத்தின் ரசீது வழங்கும் கருவி இயங்காததால்
ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வேறொரு வாக்குச்சாவடி
இயந்திரம் ஆய்வு செய்யப்பட்டது.
ஜூலை 31ம்தேதியும் ஒரு ரசீது வழங்கும் கருவி வேலை செய்யவில்லை.
இதுவரை மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் (சுமார் 30 சதவீதத்திற்கும்
அதிகமான இயந்திரங்கள்) பழுதுபட்டும், சரியாக இயங்காமலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நேற்று
காலை வாக்குச்சாவடி எண் 157க்குரிய இயந்திரங்களைச் சரிபார்க்க எடுத்தபோது மிகப்பெரிய
குளறுபடி வெளிச்சத்திற்கு வந்தது. கொளத்தூர் தொகுதியில் 36 வேட்பாளர்கள் போட்டியிட்டதால்,
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்களிக்கும் கருவிகள், 1 கட்டுப்பாட்டுப் பிரிவு என
மொத்தம் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இயந்திரத்தின் இரு பக்கங்களிலும்
உள்ள தாழ்ப்பாளில் முகவரி அட்டைகள் கட்டப்பட்டு, அதில் வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர்,
அதிகாரி கையெழுத்து ஆகியவை இடம்பெற வேண்டும்.
ஆனால், வாக்குச்சாவடி 157ன் 4 இயந்திரங்களிலும் இருந்த 7 முகவரி
அட்டைகளும் எந்த விவரமும் எழுதப்படாமல், காலியாக, புத்தம் புதிய அட்டைகளாக ஒட்டப்பட்டிருந்தன.
எழுதப்பட்ட விவரங்கள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக முகவரி அட்டையின் பின்புறம் தான்
அரக்கு முத்திரை வைக்க வேண்டும். ஆனால், இங்கு விவரங்களே எழுதப்படாத காலியான அட்டையின்
முன்பக்கத்தில் அரக்கு முத்திரை வைக்கப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கையின்போது கட்டுப்பாட்டுப் பிரிவு ஒருமுறை திறக்கப்பட்டு
மீண்டும் சீல் வைக்கப்பட வேண்டும். எனவே கட்டுப்பாட்டுப் பிரிவில் 2 அரக்கு முத்திரைகள்
இருக்க வேண்டும். ஆனால், அந்த 2 முத்திரைகளும் அங்கு இல்லை. இதை பற்றித் தேர்தல் அதிகாரிகளிடம்
கேட்டபோது, இது ‘மனித தவறு’ என்று அற்பத்தனமாக பதிலளிக்கிறார்கள். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள
முடியாது.
எனவே, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்களிடம்
பதில் பெறுவதற்காக 19 முக்கிய கேள்விகளுடன் புகார் மனு அளித்துள்ளோம். அதற்குப் பதில்
பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். திமுக தலைவரின் ஒப்புதலோடு, இந்தச்
சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தையோ அல்லது
உச்ச நீதிமன்றத்தையோ நாடி உரிய சட்டப் போராட்டம் தொடரப்படும்..’’ என்று தெரிவித்துள்ளார்.