News

Follow Us

மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தார்.

மெரினா கடற்கரையில் முதன்முதலாக அண்ணாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. தமிழினத் தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டிடக் கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக விளங்கி, உலக வரலாற்றில் உன்னத புகழ்ச் சின்னமாகத் திகழும் கலைஞர் தன்னுடைய 95ம் வயதில் 2018ம் ஆண்டு மறைந்து அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘’உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத் தலைவர், இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் முத்தமிழறிஞர், கலையுலகத்தினருக்கு என்றும் கலைஞர், தமிழ்நாட்டின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி, “என் பாதை, சுயமரியாதைப் பாதை, தமிழின நலன் காக்கும் பாதை, தமிழ் நெறி காக்கும் பாதை, பெரியாரின் பாதை, அண்ணாவின் பாதை – அறவழிப் பாதை – அமைதிப் பாதை, ஜனநாயகப் பாதை இதில் பயணித்தால் மரணமே வரும் எனப் பயமுறுத்தினாலும், அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்” என இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர்தான் கலைஞர்.

80 ஆண்டு பொதுவாழ்க்கை, 70 ஆண்டுகள் திரைத்துறை, 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுக தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர். அதேபோல், நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர், இந்தியாவில் இப்படி ஒருவர் இருந்தது கிடையாது; இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது என்று போற்றத்தக்கப் பெருமைக்குரியவர். தாய் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தா

அதனடிப்படையில், அண்ணா, கலைஞரின் நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணிக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். பின்னர் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்பின்னர், அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடங்களை தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார். நினைவிட நுழைவாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் அண்ணா படிப்பது போன்ற சிலையும், வலதுபுறம் இளங்கோவடிகள் மற்றும் இடதுபுறம் கம்பர் சிலைகளும், நினைவிடங்களின் முன்பகுதி இரு புறங்களிலும் பழமையான புல் வெளிகளும், இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியமும் அமைந்துள்ளன. இதனை பார்த்து ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்தார்.

பொதுமக்களும் தி.மு.க. தொண்டர்களும் இந்த நிகழ்வில் பெருமளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link