News

Follow Us

நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென செளமியா அன்புமணியை பா.ம.க. களத்தில் இறக்கியுள்ளது. தருமபுரி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டதுமே, அங்கு அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்றே அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால், அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். இது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லையாம். ஏற்கெனவே பல்வேறு கட்ட ஆய்வுகள் எடுத்து, அதன்பிறகே களத்தில் இறக்கியுள்ளார்களாம். பா.ம.க.வினரிடம் ஒரு பரபரப்பு வரவேண்டும் என்பதற்காகவே முதலில் வேறு ஒரு வேட்பாளர் போடப்பட்டு பின்னர் செளமியா நிறுத்தப்பட்டுள்ளார்.

இப்போது சௌமியா களத்தில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார். அனைத்து சேனல்களிலும் காட்சி தருகிறார். அன்புமணி மீது பா.ம.க.வினருக்கு கடும் அதிருப்தி இருக்கும் நிலையில், அவர்களும் செளமியாவுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற கணக்குப் போட்டே செளமியாவை களத்தில் இறக்கியிருக்கிறாராம் ராமதாஸ்.

சௌமியாவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பெண்களை கட்டி அணைத்து உருக்கமாக பேசி வாக்கு சேகரிக்கின்றனர். வன்னியர் சமூக பெண்கள் மத்தியில் இவர்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. சம்யுக்தா, சங்கமித்ரா பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

முதல் மகளான சம்யுக்தா சில நாட்கள் தனது குழந்தைகளான அகிரா, மிளிர் ஆகியோருடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். இரண்டாவது மகளான சங்கமித்ரா தனது கணவர் ஷங்கர் பாலாஜியுடன் வந்து தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். மூன்றாவது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியில் தங்கியிருந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவை பார்த்ததும் டாக்டர் ராம்தாஸ் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சங்கமித்ராவை களம் இறக்குவதற்கு முடிவு செய்திருக்கிறாராம். இப்போதே தொகுதி மக்களை நன்றாக கவனித்துக்கொள், நாளை தேர்தலுக்குத் தேவைப்படும் என்று சொல்லியிருக்கிறாராம். இதையடுத்தே கட்டிப் பிடித்தும், கெஞ்சியும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வழக்கம்போல் இன்று வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்துக்காக ஸ்டாலினை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அதில், ‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அதன் பின் இரு முறை நீட்டிக்கப்பட்ட தலா 6 மாத காலக் கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனாலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை. சமூகநீதி வேடம் போடும் திமுகவின் உண்மை முகம் சமூக அநீதி தான் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இப்படி அவ்வப்போது டாக்டர் ராமதாஸ் பூச்சாண்டி காட்டுவார், இதெல்லாம் ஒரு ஜாலிக்கு என்பது அவருக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்று பா.ம.க.வினரே சிரிக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link