Share via:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் அவர் பயன்படுத்தி வந்த ஜெர்சி எண் 7க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்றால் அது எம்.எஸ்.தோனியின் தலைமையில் இயங்கிய போதுதான் என்று சொல்ல வேண்டும். தலைசிறந்த விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனியின் தலைமையிலான இந்திய அணி ஐ.சிசி.டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் பல தொடர்களின் இந்திய அணியின் வெற்றிக்கு எம்.எஸ்.தோனி காரணமாக இருந்துள்ளார்.
மேலும் ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்சின் கேப்டனாக இருந்து வந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக காலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனவே வருகிற 2024ம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளில் எம்.எஸ்.தோனி பங்கேற்க வாய்ப்புள்ளது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிற்கு எம்.எஸ்.தோனி அளித்துள்ள பங்களிப்பையும், வெற்றிகளையும் கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7&க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இனி 7ம் நம்பர் பொறித்த ஜெர்சியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது.
இதற்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய ஜெர்சி நம்பர் 10க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வகையில் தற்போது எம்.எஸ்.தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.