Share via:
சினிமாவில் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாமகவில் மோதல் நடைபெற்று
வருகிறது. பதவிக்காக அரசர்கள் குடும்பத்தில் கொலைகள் நடக்கும் என்று பாடப்புத்தகங்களில்
படித்திருக்கிறோம். இப்போது ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் நடக்கும் சண்டை அந்த பதவி
ஆசையின் விபரீதத்தைக் காட்டுகிறது.
அன்புமணியிடம் இருந்து மாம்பழத்தையும் கட்சியையும் கைப்பற்ற ராமதாஸ்
செய்த அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டது. இந்த நிலையில், அன்புமணி அணி போட்டியிடும்
18 தொகுதிகளிலும் தோற்க வேண்டும் என்று வில்லங்க வீடியோ ஒன்றை ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ராமதாஸ், “இந்தத் தேர்தலில் ஒரு துரோகியும், துரோகக்
கூட்டமும் போட்டியிடுகின்றனர். என் மகனான அன்புமணி எனக்கும், என் கட்சிக்கும் செய்த
துரோகத்தை வரிசைப்படுத்தினால் மணிக்கணக்கில் செல்லும். இந்தத் துரோக கூட்டத்திற்கு
மக்கள் வாக்களிக்கக் கூடாது.
மக்களுக்கு சேவை செய்வது அல்ல, அதிகாரம் கைக்கு வரும்போது பணம்
சம்பாதிப்பதுதான் இந்தத் துரோகக் கூட்டத்தின் நோக்கம். எனவே 18 தொகுதிகளில் நிற்கும்
இந்தத் துரோகி கூட்டத்திற்கு வாக்களிக்க வேண்டாம். பணம் சம்பாதிக்கும் கலையைத்தான்
இந்தக் கூட்டம் கற்றுள்ளது.
அதனால்தான், நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்தத் தேர்தலாக இருந்தாலும்
இவர் வீட்டில் படுத்துக்கொண்டு தனது மனைவியை போட்டியிட வைக்கிறார். இந்தியாவிலேயே மிகக்
குறைவான நாட்கள் நாடாளுமன்றம் சென்றது இவர் (அன்புமணி) மட்டும்தான்.
தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போதும், மகிழ்ச்சியான நாள்
வரும்போதும் பிள்ளைகள் அவர்களைச் சந்திப்பார்கள். ஆனால், இவர் எதற்கும் முகம்கூட காட்ட
மாட்டார். சேலத்தில் அருளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது உடல் நலக் குறைவு ஏற்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்தச்
சூழலிலும் ஒரு வார்த்தை என்னை அவர் விசாரிக்கவில்லை.
எனவே இந்தத் துரோகி கும்பல் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவர்களுக்கு
வாக்காளர்கள் வாக்கு செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஏன் வாக்களிக்க வேண்டாம்
என்கிறேன் என்றால், இவர்கள் வென்று சட்டமன்றம் சென்று மக்கள் சேவை செய்ய மாட்டார்கள்.
பணம் சம்பாதிக்க எங்கு, யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதைத்தான் பார்ப்பார்கள்’’
என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இப்போது இதே பாணியில் சசிகலாவும் வீடியோ போடத் தயாராகிவருகிறாராம்.
