Share via:
விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் விஜய் கட்சியில் இணைவதற்கு
முன்னோட்டம் பார்த்துவரும் நிலையில், கட்சிக்குள் தடுமாறிக்கொண்டிருந்த வேலுமணி, தங்கமணி
உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி கொடுத்து அதிமுகவை பரபரப்பாக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிவிப்பின்படி, தலைமை
நிலையச் செயலாளராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வரகூர் அ.அருணாசலம்
நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன்,
எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ண
ரெட்டி, மாஃபா பாண்டியராஜன், திருத்தணி கோ.அரி எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு அமைப்புச்
செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவராக ஏடிசி. பொன் தனபாலன், செயலாளராக
பெல் இரா.தமிழரசன், மருத்துவ அணி செயலாளராக வி.சரோஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள்
அருண்மொழித்தேவன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்டோருக்கு கட்சியின் கொள்கை
பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட
பி.சந்தானகிருஷ்ணன், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராகவும், பெரம்பலூர்
மாவட்டச் செயலாளராக என்.வெங்கடாசலம், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக
பி.ஜெயபெருமாள், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக எம்.சுசீகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள்
அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ள நிலையில்,
அம்மாவட்டத்தில் பெரும்பாலான கட்சிப் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் விஜய் கட்சிக்குத் தாவும் அதிமுக பிரமுகர்களுக்கு தடுமாற்றத்தை உண்டாக்கிவிட்டார்
எடப்பாடி.
இதை எடப்பாடியிடம் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றம் என்கிறார்கள்.
அதேநேரம் ஒருசிலர், ‘’அதிமுகவின் அமைப்பு விதிகளின்படி, அவைத்தலைவர், பொதுச்செயலாளர்,
மாவட்ட செயலாளர் பதவிகள் தவிர்த்து வேறு எந்த பதவிகளுக்கும் அதிகாரம் என்பது துளியும்
இல்லை. அனைத்து பதவிகளும் அலங்கார பதவிகளே. மாவட்ட செயலாளராக இருக்கும் ஒருவரை நீக்கி
விட்டு, துணை பொதுச்செயலாளர், கொள்கை பரப்பு துணை செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற
செயலாளர் என்று அறிவிப்பு செய்வது கண் துடைப்பு என்கிறார்கள்.
எப்படியோ மீண்டும் பரபரப்புக்கு அதிமுகவை கொண்டுவந்துள்ளார் எடப்பாடி
பழனிசாமி.
