Share via:
நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள்
மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்
நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியிருக்கிறது
ஆளும் பாஜக அரசு.
20 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசுபவர்கள், ‘’நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள்
மூலமும், அராஜகக் கைதுகள் மூலமும் நசுக்கப் பார்க்கும் இந்த ஜனநாயக விரோத, சர்வாதிகாரப்
போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வி அமைச்சரின் தோல்வியை மறைக்கப் போராடுபவர்கள்
மீது ஏவப்படும் இந்த கோழைத்தனமான அடக்குமுறைக்கு எதிராக, நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகச்
சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும். ஜந்தர் மந்தரிலிருந்து எழப்போகும் இந்த
உழைக்கும் வர்க்க இளைஞர்களின் புரட்சிப் பேரலை, உங்கள் அதிகாரச் சிம்மாசனத்தின் அஸ்திவாரத்தையே
உலுக்கித் தகர்க்கும் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்! தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலகு’’
என்று குரல் எழுப்புகிறார்கள்.
லடாக்கின் கல்வியாளரும் சமூகப் போராளியுமான சோனம் வாங்சுக் நடத்தும்
போராட்டம் பற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கோ.அரவிந்த்சாமி,
‘“கல்வி முறையில் ஏற்பட்ட சீர்கேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்; ஒன்றிய கல்வி
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து தில்லியில்
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தில்லி ஜந்தர் மந்தரில் மருத்துவர்களின் கண்காணிப்பில் படுத்தபடியே
போராடி வரும் அவர், 20 நாட்களாக உணவு எடுக்காததால் உடல் எடை 8 கிலோ வரை குறைந்துள்ளது.
இருப்பினும், அவரது கோரிக்கைகள் குறித்து ஒன்றிய மோடி அரசிடம் இருந்து எந்தவித பதிலும்
வரவில்லை.
2009-இல் வெளியான ‘3 Idiots’ மற்றும் 2012-இல் தமிழில் வெளியான
‘நண்பன்’ திரைப்படத்தில் இன்றைய தமிழக முதல்வர் விஜய் நடித்த “பாரி” கதாபாத்திரம் பலருக்கும்
நினைவிருக்கும். மனப்பாடக் கல்வியை எதிர்த்து, புரிந்துகொண்டு கற்கும் கல்வியை வலியுறுத்தி,
மதிப்பெண்களை விட அறிவுக்கும், போட்டியை விட படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்
அந்தக் கதாபாத்திரம் இந்தியக் கல்வி அமைப்பின் குறைகளைக் கேள்விக்குள்ளாக்கியது. அந்த
பாரி கதாபாத்திரத்திற்கு உத்வேகமாக இருந்த நிஜ மனிதர்தான் இந்த சோனம் வாங்சுக்.
திரைப்படக் கதாபாத்திரத்தை விடவும் நிஜ வாழ்க்கையில் அவர் மிகப்
பெரிய சமூகச் செயற்பாட்டாளர். மாணவர்கள் மனப்பாடம் செய்வதை விட சிந்திக்க வேண்டும்
என்ற கல்விக் கொள்கையை நடைமுறையில் செயல்படுத்தியவர். தோல்வியடைந்த மாணவர்களுக்குக்
கூடப் புதிய வாழ்க்கை அளித்த கல்வி முறையை உருவாக்கியவர். அறிவியல் ஆய்வகத்தில் மட்டும்
முடங்கிக் கிடக்கக் கூடாது; அது சமூகத்தின் அன்றாடத் தேவைகளைத் தீர்க்க வேண்டும் என்பதைத்
தனது கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்தவர். லடாக்கில் மாற்றுக் கல்வி இயக்கத்தை உருவாக்கி
ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியவர்.
இந்தியக் கல்வி அமைப்பின் மீது மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்த
NEET மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தபோது,
கல்வித் துறையில் அரசியல் பொறுப்புணர்வு தேவை என்ற குரலை அவர் வலுவாக எழுப்பினார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட
விதம், தேர்வு வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை
ஏற்படுத்தின. இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி
அமைப்புகளும், பல்வேறு குடிமக்கள் அமைப்புகளும் தேசியத் தேர்வு முகமை மீது விசாரணை
நடத்த வேண்டும், இந்தக் குளறுபடிகளுக்குக் கல்வி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான், “கல்வியைப் பாதுகாக்கப் பொறுப்பற்ற அரசிற்கு
அரசியல் பொறுப்பும் இருக்க வேண்டும்” என்று கூறி சோனம் வாங்சுக் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
“என்னிடம் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லாதீர்கள்; அதற்குப் பதிலாக ஒன்றிய அரசுடனும்
கல்வி அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத்
தீர்வு காண வலியுறுத்துங்கள்” என்று அவர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
லடாக்கின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற மாற்றுக் கல்வி முறையை உருவாக்கியது,
மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் SECMOL கல்வி இயக்கத்தை முன்னெடுத்தது, காலநிலை
மாற்றத்தை எதிர்கொள்ள உலகப் புகழ்பெற்ற ‘ஐஸ் ஸ்தூபி’ (Ice Stupa) தொழில்நுட்பத்தை உருவாக்கியது
போன்ற சமூகப் பங்களிப்புகளுக்காகச் சோனம் வாங்சுக் உலகளவில் கௌரவிக்கப்பட்டவர்.
இந்தப் பணிகளுக்காகவே அவருக்கு 2018-ஆம் ஆண்டு ஆசியாவின் உயரிய
குடிமக்கள் விருதாகக் கருதப்படும் ‘ராமன் மகசேசே விருது’ வழங்கப்பட்டது. மேலும், ரோலக்ஸ்
விருது, பசுமை ஆசிரியர் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
ஒரு காலத்தில் உலகம் அவரது கண்டுபிடிப்புகளையும் கல்விச் சீர்திருத்தங்களையும்
பாராட்டி விருதுகளை வழங்கியது; இன்று அதே மனிதர் கல்வியைப் பாதுகாக்கத் தனது உயிரைப்
பணயம் வைத்துப் போராடுகிறார். ஆனால், அவரது குரலைக் கேட்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு
மட்டும் மௌனம் காக்கிறது…’’என்று காட்டம் காட்டியுள்ளார்.