Share via:
இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அபாரமாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
13&வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்த நிலையில் 241 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெற்றிவாகை சூடியது.
இறுதிப்போட்டிக்கு முன்பு பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், ‘‘1.30 லட்சம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவதே எனது இலக்கு’’ என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் எரிச்சலடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் அசத்தலான பேட்டிங் மற்றும் பீல்டிங்கின் போது ஆரவாரம் செய்து இந்திய அணியை உற்சாகப்படுத்தினர். இருப்பினும் இந்திய அணி போராடி வெற்றியை கைநழுவவிட்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசும்போது, ‘‘நாங்கள் பந்து வீசிய தருணத்தில் இந்திய ரசிகர்கள் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சில நேரங்களில் அவர்கள் அதிகப்படியான சத்தத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்தது அபாரமாக இருந்தது என்று தெரிவித்தார் மேலும் ஒருவேளை இப்போட்டியில் நாங்கள் (ஆஸ்திரேலியா) தோல்வியை தழுவியிருந்தாலும் இவ்வளவு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய அனுபவத்தை எப்போதும் மறந்திருக்கமாட்டோம்’’ என்று கூறியுள்ளார்.