Share via:
ஆளுநருக்கு ஆய்வு நடத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அமைச்சர்
நிர்மல் குமார் தொடங்கி கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,
ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று ஆதரவு கொடுக்க
களம் இறங்கியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
இன்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை தமிழக பாஜக
தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சந்தித்து, தவெக
அரசுக்கு எதிராக புகார் அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ‘’மதுரை
வைகை ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறியதில் என்ன தவறு உள்ளது. அக்கறையில்தானே
அதைக் கூறியுள்ளார். அரசுப் பணிகளில் ஆய்வு நடத்தவும் ஆளுநருக்கு உரிமை உள்ளது. இந்த
தவெக அரசு அமைய பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறியவரே ஆளுநர்தானே.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள்
அல்லாத இரு தனி நபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், அமைச்சர் விஸ்வநாதன் மீது நடவடிக்கை
கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் பெண் குழந்தைகளிடம் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்
நடந்து கொண்ட விதம் குறித்து குற்றஞ்சாட்டி மனு கொடுத்திருக்கிறோம்’’ என்று கூறினார்.
விஜய் குறித்து நயினார், ‘’நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும்
விட மாட்டோம் என்று வசனம் பேசிய தவெக தலைவர் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்றதில்
இருந்து, தவெகவினரின் மாமூல் அராஜகம், டெண்டர் விடுவதில் முறைகேடு, உதவிப்பேராசிரியர்
தேர்வில் குளறுபடிகள், அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் ஊழல், வேண்டியவருக்கு அரசு
பதவிகள் கொடுப்பது என எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டும் தான்
கொடி கட்டிப் பறக்கின்றன.
அரசு வேலையை நம்பி பல கனவுகளுடன் காத்துக்கிடக்கும் பட்டதாரிகளின்
நம்பிக்கைகள் இப்படி சுக்குநூறாக உடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, முதல்வர் ஜோசப் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை
உடனடியாக விசாரிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநரை வைத்து ஆட்டம் சூடு பிடிக்கிறது.