Share via:
தேர்தலில் தோல்வி அடைந்த மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறினார்
ரஜினிகாந்த். விஜய்யை ஆட்சியமைக்க விடாமல் எப்படியாவது தடுக்க வேண்டுமென ரஜினி கேட்டுக்கொண்டதாக
சொல்லப்பட்டது. இதையடுத்து ரஜினியை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவந்தனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்
ரஜினி. அப்போது அவர், ‘’அரசியல் களத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யைக்
கண்டு நான் ஒருபோதும் பொறாமைப்படவில்லை, அந்தளவுக்கு நான் ஒன்றும் கேவலமான மனிதன் அல்ல.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் முதலில் நேரில் சென்று சந்தித்தது
மு.க.ஸ்டாலினை மட்டும்தான். எங்களுக்குள் கடந்த 35 முதல் 40 ஆண்டுகாலமாக மிக ஆழமான
நட்பு இருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் அவர் தோல்வியடைந்ததால் ஒரு நண்பனாக மட்டுமே
அவரை நேரில் போய்ப் பார்த்தேன்.
ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் தான் ஏதோ இரண்டு கட்சிகளைப்
பின்னாடி இருந்து அரசியல் ரீதியாக ஒன்றிணைக்க முயற்சிப்பது போலப் பலர் அவதூறாகப் பேசி
வருகிறார்கள். அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் கேவலமான நபர் தான் இல்லை’’
என்றும் ரஜினிகாந்த் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மத்தியில் ஆளும் சக்திவாய்ந்த பாஜாக மற்றும்
தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகள் ஆகிய அத்தனை பேருக்கும் எதிராகத் தனித்து
நின்று களம் கண்டு, மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர்
விஜய், முன்பு எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் சாதித்ததை விடவும் மிகப்பெரிய சாதனையை
நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
விஜய்யின் இந்த விஸ்வரூப அரசியல் வளர்ச்சி தனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்
எல்லையற்ற மகிழ்ச்சியையும் அளிக்கிறது. விஜயிடம் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா இருக்கு; அதை
அவர் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு; ஒரு 2 வருஷம் அவர விட்டுடணும். நான்
சம்பிரதாயத்துக்காக போய் ‘விஜய்’ அவர்களை போய் சந்திக்க விருப்பப்படவில்லை
விஜய் வென்றதால் எனக்குப் பொறாமை இல்லை. நான் தேர்தலுக்கு வந்தால்
நிச்சயம் வெற்றி அடைந்திருப்பேன். ஆனால், நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று ஏற்கெனவே
கிளியரா சொல்லி விட்டேன்.
சில விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அது உண்மையாகி விடும்
விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது. அதனாலே இதை
தெளிவுபடுத்துகிறேன்’’ என்று பேசியிருக்கிறார்.
விஜய் ரசிகர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் பேசப்பட்டு வந்த
விஷயங்களுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதேநேரம், முதல்வர் விஜய் ஏதேனும்
நடவடிக்கை எடுத்துவிடுவார் என்று ரஜினி பயந்துவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் குதூகலம்
அடைகிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு ரஜினி, ‘’தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள்
ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்ன தப்பு பண்ணினாலும் அது நேரடியாக விஜய்க்கு
பாதிப்பு என உணரவேண்டும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.