Share via:
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து
வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில்
திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று
குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது என்ன
தடை செய்யப்பட்ட இயக்கமா என்று தவெகவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதுகுறித்து அதிமுக ஐ.டி.விங், ‘’திண்டுக்கல் மாவட்டத்தின் குஜிலியம்பாறை
தாலுகாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களின் தரவுகளை சேகரிக்க உத்தரவிட்டு வட்டாட்சியர்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆதரவு அளித்த தோழர்களுக்கே குஜிலிமஸ்து
செய்யப் போகிறதா ஆச்சரியக்குறி அரசு?
ஒருவேளை இன்னும் அதிகாரப் பூர்வமாக கூட்டணிக்குள் வரவில்லை என்பதால்
கொடுக்கப்படும் மிரட்டலா இது? குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்று உருட்டி இந்த
ரசிக வெறி கும்பலுக்கு ஆதரவு கொடுத்த தோழர்களை பிரிட்டிஷ் காலத்து கைரேகை சட்ட பாணியில்
கையாள முனைவது கடும் கண்டனத்திற்குரியது. தேசிய கட்சி அந்தஸ்தில் உள்ள மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய அளவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை ஏதோ
தீவிரவாத இயக்கம் போல இந்த அரசு நடத்துவதற்கான விளக்கத்தை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
இது கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது மட்டுமல்ல – ஒட்டுமொத்த ஜனநாயக அரசியலமைப்பு மீதான கொடுங்கோல்
தாக்குதல்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச்
ஜனதா பார்ட்டி மாணவர் அமைப்புகள் போராடும் போது, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க கூடாது
என்ற உத்தரவை கல்லூரி இயக்குநர் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார். இதுவும் இடதுசாரி
மாணவர் அமைப்புக்குக் கொடுக்கும் நெருக்கடியாகவே கருதப்படுகிறது.
பொதுவாக அடிப்படை சார்ந்த உரிமைகளுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும்
இளைஞர்கள் போராட்டம் செய்வது என்பது அவர்களின் விருப்பம். காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும்
போராட்டங்களில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்வதில்லை. போராட்டம் மற்றும் கிளர்ச்சியில்
பங்கேற்க தடை செய்ய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது என்பதெல்லாம் தேவையில்லாத
செயல்.
இந்த நிலையில் விஜய் நடவடிக்கைக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில்
ஒப்பந்தப்பணியாளர் நியமனத்துக்கு கம்யூனிஸ்ட் போராடியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 30,000 காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. கடந்த
ஆட்சியில் இந்த பணியிடங்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் அரசாணை பிறப்பித்து
சால்வாட் என்கிற நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்கள் நடத்துநர்கள்
வேலையில் அமர்த்தப்பட்டனர். அப்போது அதை எதிர்த்து சிஐடியூ தொழிற்சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை
விசாரித்த நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர் முறை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது
பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று தீர்ப்பளித்தது.
உடனடியாக கடந்த அரசு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று
மேல்முறையீடு செய்ய அதை ஏற்று உயர்நீதிமன்றம் தனிநீதிபதியின் உத்தரவை ரத்து
செய்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளது. இப்போது புதிதாக அமைந்த இந்த அரசும் அதே ஒப்பந்த தொழிலாளர்
முறையை போக்குவரத்து கழகத்தில் செயல்படுத்த கூடுதலாக சால்வாட் நிறுவனத்துக்கு
பதிலாக உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு
ஒப்பந்தத்தை மாற்றியுள்ளது.
அந்த நிறுவனம் வெளி மாநில
ஆட்களை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு அனுப்பியுள்ளது. அரசு
பேருந்தில் பயணிக்க கூடிய எளிய மக்களிடம் தமிழ் தெரியாத வெளி மாநில ஆட்களை
பணியமர்த்தினால் எத்தனை சிரமம் என்பது கூட அறியாத நிறுவனமும் அரசும் கோரிக்கை வெளி
மாநில ஆட்களை ஒப்பந்த பணியில் அமர்த்தக்கூடாது என்பதாக இருக்க கூடாது. இட
ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரான உழைப்பு சுரண்டலின் நிறுவனமயமாக்கப்பட்ட வடிவமான
ஒப்பந்ந தொழிலாளர் முறையை அடியோடு ஒழித்து நிரந்தர பணியாளர்களை இட ஒதுக்கீட்டின்
அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்.’’ என்று கொதிக்கிறார்கள்.
இதற்காக கம்யூனிஸ்ட் கட்சி
கொடுத்த ஆதரவையும், சோபாவையும் திருப்பிக் கொடுக்குமா..?