Share via:
இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சிக்கு எதிராக ருத்ரதாண்டவம்
ஆடியிருக்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா?
என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதும் எடப்பாடி பழனிசாமி கொதித்து எழுந்துவிட்டார்.
‘’நடந்தது தெரியாமல் பேசக்கூடாது. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின்
மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை புரிந்துகொண்டு பேசவேண்டும். ஒரு கட்சியில் வெற்றி
பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேருவதா? எங்களோடு இருந்தவர்கள்
திடீரென எப்படி வேறு கட்சிக்கு செல்வார்கள்? என்று ஆவேசம் காட்டினார்.
இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ‘’குதிரை பேரம் பற்றிய
பேச்சை அவை முன்னவர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று சமாளித்தார்.
உடனே அவைத் தலைவர் பேச்சுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
பேச எழுந்த போதெல்லாம் மைக் அணைக்கப்பட்டது. உடனே அதிமுகவினர் எழுந்து முழக்கமிட்டனர்.
உடனே சபாநாயகர், ‘’இப்படி எல்லாம் எழுந்து நின்றால் என்ன அர்த்தம்?’’
என்று கேட்டதும் எடப்பாடி பழனிசாமி, ‘’எங்களை ஏன் நிக்குறீங்கன்னு கேட்குறீங்க. உங்க
கட்சியை ஏன் நிக்கிறீங்கன்னு கேட்கமாட்றீங்க ? எங்க உழைப்பை திருடிட்டு மத்த கட்சிக்கு
போனவனை பத்தி பேச எங்களுக்கு உரிமை இல்லையா ?? பேச வாய்ப்பு கொடுக்கலனா நிக்கதான் செய்வாங்க..
என்னங்க இது அநியாயம்?” என்று எகிறினார்.
மேலும், “ஏன்… உங்க கட்சியை விலைக்கு வாங்க முடியாதா?”
என்று எடப்பாடி பேசியதைக் கேட்டு சபாநாயகர் ஷாக் ஆகிவிட்டார்.
