Share via:
தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் ஜனநாயகத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை விதைத்துள்ளது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா ஒரு தீர்வு இல்லை என்றாலும், பொறுப்பை மத்திய அரசு ஏற்கும் சூழல் உருவாக்கியிருக்கிறது.
கடந்த 12 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள், பல அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. பல மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை வலியுறுத்தியுள்ளன. விவசாயிகள் இரண்டு ஆண்டுகள் போராடினார்கள். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத மோடி முதல்முறையாக காக்ரோச் போராட்டத்திற்குப் பயந்து தன்னுடைய அமைச்சரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு இன்ஸ்டாகிராம் மூலம் குவிந்த இளைஞர்களை காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குகியது. மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது. தரதரவென்று தாறுமாறாக இழுத்துச் செல்கிறார்கள். கண்ணீர்புகை குண்டு விசப்பட்டது. ஆனாலும், மீண்டும் மீண்டும் வந்தார்கள், போராடினார்கள்.
20 நாட்கள் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, காங்கிரஸ், திரிணாமுல், திமுக தலைவர்கள் மட்டுமே ஆதரவு கொடுத்தனர். இளைஞர் எழுச்சியால் ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
50 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடுவதைப் பார்த்தே மோடி பயந்துவிட்டார். இவர்களுக்கு அதிகாரம், பதவி எதுவும் தேவையில்லை. அதனால் இவர்களை சமாளிக்க முடியாது என்பது மோடிக்குத் தெரிந்துவிட்டது.
கல்வி மற்றும் தேர்வு முறை நாசமாகிவிட்டது. வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருக்கிறார். ஆனால், இது மட்டும் போதாது. கல்வித் துறையில் அரசு புதிய மாற்றங்களை, நியாயமான வழிமுறைகளை கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்த போராட்டத்துக்கு நியாயமான அர்த்தம் கிடைக்கும்.

