Share via:
கரூர் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய சாட்சிகள் என்பதால்,
அவர்களைப் பற்றி அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் தேவையற்ற கருத்துகளைத்
தெரிவிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் அனைத்தும்
சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் திமுக போட்ட
வழக்கை திரும்பப் பெற்றுவிட்டது என்றாலும் இன்னமும் அந்த பிரச்னையை விடப்போவதில்லை
என்பதையே அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
உச்சநீதிமன்றத்தில் திமுக, ‘’விஜய்யோ, அமைச்சர்களோ வழக்கு குறித்து
உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதையோ, நிவாரணம் வழங்குவதையோ நாங்கள்
எதிர்க்கவில்லை” என்று தெளிவுபடுத்தி இருந்தனர். ஆனால், சில ஊடகங்களும், தவெக
ஆதரவாளர்களும் பொய் தகவல் பரப்பினார்கள்.
ஆகவே, திமுக இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என்று அடுத்தகட்ட
நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
அதன்படி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் ஆதவ்
அர்ஜுனாவுக்கு எதிராக இரண்டு முக்கிய இடங்களுக்குப் புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார்.
கரூர் கொடுந்துயரம் தொடர்பாக முழுமையான உண்மைகளைக் கண்டறிய, ஓய்வு
பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உயர்நிலைக் விசாரணைக் குழுவிடம்
புகார் அனுப்பியிருக்கிறார். அதில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் இந்தச் சம்பவம்
குறித்துப் பேசிய பேச்சுக்கள், விசாரணையின் நேர்மையைக் குலைக்கும் வகையில் இருப்பதால்,
சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு, சி.பி.ஐ தலைமையகத்திற்கும் ஒரு பிரத்யேகப் புகார் மனுவை
அனுப்பியுள்ளார்.அதில், கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள்
மற்றும் திரைக்குப் பின்னால் இருக்கும் விவரங்கள் குறித்து சி.பி.ஐ தனியாக ஒரு புதிய
வழக்கைப் பதிவு செய்து அவரிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டிருப்பது
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.