Share via:
முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதற்காக நேற்று ஆத்தூர் பேரூராட்சி
அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து,
சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு
வழக்கறிஞரும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர். அதன் பின்னர், அனிதா
ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதி சிதம்பரம் உத்தரவிட்டார். மேலும்,
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆத்தூர் காவல் நிலையத்தில்
பத்து நாட்கள் கையிழுத்திட வேண்டும் என்றும், நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து
திருச்செந்தூர் பகுதியில் இன்று கடையடைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவை மிரட்டும் விதமாக அவதூறுக்குக் கைது என்று முதல் நடவடிக்கையை விஜய் அதிரடியாகத்
தொடங்கியிருந்தார். நேற்று கைது செய்யப்பட்டால், இரண்டு நாட்கள் சிறையில் இருக்கவேண்டிய
சூழல் நிலவியது. இந்நிலையில் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், ”திமுகவைச்
சேர்ந்தவர்களை எந்த விதத்திலும் மிரட்டி பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றார்கள். நான்
அங்கு இருக்கும் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேருங்கள்; நாங்கள்
உதவி செய்கிறோம் என்றார்கள். தாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். இன்றைக்கு வந்த கட்சிக்கு
நாங்கள் பயப்பட வேண்டுமா? தலைவர் தைரியமாக இருக்கக் கூறி இருக்கின்றார். அந்த தென்போடு
எந்தவித பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கிறேன்
குதிரை அல்ல ஒட்டக பேரம் கூட என்னிடம் நடத்த முடியாது, காவல்துறை
என்னை தாக்கினால் திருப்பி தாக்குவேன். நான் சேலஞ்சா சொல்றேன், திருச்செந்தூர்ல இருக்கிற
அருள்மிகு சுப்பிரமணிய சாமி மேல சத்தியமா சொல்றேன், ஆறு மாசத்துக்கு மேல இந்த தவெக
ஆட்சி இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்’’ என்று சவால் விட்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’72 வயது ஆனாலும், உடல் உபாதைகள்
இருந்தாலும் மருத்துவக் காரணம் எதுவும் சொல்லி தப்பிக்க அனிதா ராதாகிருஷ்ணன் முயலவில்லை.
எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, எந்த பேரத்துக்கும் பணியவில்லை , எந்த ஷோபா ஆசைக்கும்
அடிபணிய நினைக்கவில்லை. ஒரே நம்பிக்கை கழகம். சட்டப்படி போராடி, தனது சொந்த ஜாமினில்
சிங்கம் போல பிணையில் வெளியே வந்து உள்ளார். இது விஜய் நடவடிக்கைக்குக் கிடைத்த முதல்
தோல்வி. இனி, தோல்விகள் தொடரும்’’ என்று குஷியாகப் பேசுகிறார்கள்.
அதேநேரம் அமைச்சர் நிர்மல்குமார், ‘’தவம் இருந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை
தவெகவில் சேர்க்க மாட்டோம். முதல்வர் விஜய் காலில் விழுந்து கெஞ்சினாலும் அவரை கட்சியில்
சேர்க்க மாட்டோம். தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை இருக்கும்’’
என்று கூறியிருகிறார்.
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா
செய்யுமாறு மிரட்டுகிறார்கள் என்றும், பணம் கொடுத்து தன்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்
என்றும் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். தவெக எம்எல்ஏ கொடுத்த புகாரின் மீது
எடுக்கப்படும் நடவடிக்கை போல திமுக எம்எல்ஏ வைக்கும் குற்றச்சாட்டின் மீதும் நடவடிக்கை
எடுக்க உத்தரவிடுவாரா விஜய்..?