Share via:
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட
7 மாநிலங்களவை எம்.பி.க்கள், திடீரென பாஜகவில் இணைந்துள்ள விவகாரம் இந்திய அரசியலைப்
புரட்டிப் போட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு தூண்டிலாகப்
பயன்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் துரோகச் செயலுக்கு, துரோகம் பரிசாகக் கிடைத்திருக்கிறது.
இப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள்
உள்ளனர். கட்சியின் முக்கியத் தலைவரான ராகவ் சத்தா எம்.பி., அக்கட்சியின்
மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து
அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ராகவ் சத்தாவுக்கும் இடையே
மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில்
இணைவதாக நேற்று அறிவித்தார். அவருடன், மேலும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களும் பாஜகவில்
இணைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ராகவ் சத்தா, ‘’ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை
எம்.பி.க்களில் மூன்றில் 2 பங்கினர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம். என்னுடன்
சேர்ந்து ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர்
குப்தா, விக்ரம் சாஹ்னி என மொத்தம் 7 எம்.பி.க்கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி
உள்ளோம்.
எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்காக
அர்ப்பணித்தேன். ஆனால், நேர்மையான அரசியலை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்த
இயக்கம், தற்போது அந்த பாதையில் இருந்து விலகிவிட்டது. நியாயமான மனிதனாகிய
நான் தவறான, நேர்மை இல்லாத ஒரு கட்சியில் இருந்ததை இப்போது உணர்கிறேன். எனவே,
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி மக்களுக்காகப் பணியாற்ற முடிவெடுத்துள்ளேன்’’
என்று கூறினார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில்
2 பங்கு உறுப்பினர்கள் விலகி, வேறொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே அவர்களின்
பதவி பறிபோகாது. இந்த நிலையில், தற்போது மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஒரே
நேரத்தில் விலகியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது.
இந்நிலையில் துரோகத்தின் மூலம் பதவிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
துரோகமே பரிசாகக் கிடைத்திருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து பேசுபவர்கள், ‘’காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அண்ணா
ஹசாரே நடத்திய போராட்டங்களுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் முழு நிதி உதவியையும்
ஆதரவையும் வழங்கியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை
அவமானப்படுத்துவதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை மீட்போம், லோக்பால் சட்டத்தைக்
கொண்டு வருவோம் என்று அவர்கள் நாட்டு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை அளித்தனர். இன்று
லோக்பால் எங்கே இருக்கிறது? அது அவர்களின் செயல்திட்டத்திலேயே இல்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற ஊழல்
புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்று நீதிமன்றங்களே கூறிவிட்டன. இதற்காக அண்ணா ஹசாரேவோ
அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலோ இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை…’’ என்று வரலாற்றை பேசுகிறார்கள்.
என்ன விதைக்கிறீர்களோ, அதுவே முளைக்கும்.
