Share via:
நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த
தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விஜய் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய
குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில்
ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரபரப்பைக் கிளப்பினார்.
இந்த நிலையில், விஜய் அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல்
செய்யப்பட இருக்கும் நிலையில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்
கடந்த ஜூன் 5ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த
இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் முதல்
வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் மக்களைக் கவரும் பல திட்டங்கள்
அறிவிக்கப்படலாம். இந்த நிலையில் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம்
குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறைவாரியான ஆலோசனைக்
கூட்டங்கள் நடந்துவருகின்றன. ஜூலை 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் விஜய்
தலைமையில் 2வது அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட
உள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை மாதம் 2,500 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட சில
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முடிவு எடுக்கப்படும். மேகேதாட்டு அணை விவகாரத்தில்
அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம்.