Share via:
முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியலையை
ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஜூன் 20, 2026 அன்று நடைபெற்ற
பொதுக்கூட்டம் ஒன்றில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத்
தெரிவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படலாம்
என்று கருதிய முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த
முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்தார்.
அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த அந்தப் பேச்சின் எழுத்துப்பூர்வமான
நகலைப் படித்த பிறகு, “தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் முன்னாள்
அமைச்சர் ஒருவர் எவ்வாறு இத்தகைய மொழியைப் பயன்படுத்த முடியும்?” என்று நீதிபதி
கேள்வி எழுப்பினார். “அவர் ஒரு சாதாரண நபர் அல்லவே; முதலமைச்சர் பதவிக்கு அவர்
உரிய மரியாதை அளிக்க வேண்டாமா?” என்றும் குறிப்பிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த தகவல் தெரியவந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் திருச்செந்தூர்
தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன்
எம்எல்ஏவை இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் கைது செய்தார். இதை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனை
விசாரணைக்காக போலீசார் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அவரிடம் எஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்திய
நேரத்தில் திமுகவினர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 90 நிமிடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்
கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படுகிறது. இன்று கைது
செய்தால் இரண்டு நாட்கள் சிறையில் இருக்கவேண்டியிருக்கும் என்று திட்டமிட்டு கைது செய்ததாக
கூறப்படுகிறது.
தமிழகம் வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் முதன் முறையாக கைது செய்யப்பட்டு
இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பழிவாங்கும் நடவடிக்கை தொடரும் என்கிறார்கள்.
எதிர்க்கட்சியாக திமுக என்ன செய்யப்போகிறது..?