Share via:
நீண்ட காலமாக ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட
வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் போராடி வருகிறது. விஜய் ஆட்சியில் அதற்கு தீர்வு
தென்படுகிறது. விரைவில் ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர்
வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெளசல்யா சங்கர், ‘’ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்
இயற்றப்படும் என தோழர் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தவெக
அரசின் சார்பாக அறிவித்திருக்கிறார் . இவ்வறிவிப்பை வரவேற்கிறேன். எனது மகிழ்ச்சியை
எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்
ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
கண்ணகி முருகேசன் தொடக்கம் அல்ல தையூர் பிரவீன் முடிவும் அல்ல.
ஒவ்வொரு ஆணவக் கொலை நடக்கும் போதும் என் மனம் வெட்டுப்பட்ட சங்கர் முன் நடுத்தெருவில்
நான் நின்றபோது இருந்த மனநிலை எனக்கு வந்து சேர்ந்துவிடும். பதற்றப்படுவேன். தவிப்பேன்.
மனம் கனக்கும். தூங்காமல் கிடந்திருக்கிறேன். கொலையுண்ட களத்திற்குப் போய் பாதிக்கப்பட்டவர்களோடு
என்னை இணைத்துக் கொள்வேன். அப்படி நடக்கிற ஒவ்வொரு முறையும் தனிச்சட்டம் கோரியிருக்கிறேன்.
சங்கரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் இந்தக் கோரிக்கைக்காகவே மக்கள் இயக்கங்களை மாநாடாக,
கருத்தரங்குகளாக, பொதுக் கூட்டங்களாக முன்னெடுத்து வந்திருக்கிறேன்.
கடைசியாக சங்கர் நினைவேந்தலில் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்டவர்களை
முடிந்தவரை ஒருங்கிணைத்து அவர்கள் வலிகளை மக்கள் முன் பேசச் செய்தேன். ஒவ்வொருவரும்
அழுதபடியேதான் பேசினார்கள். அந்த நிலையிலும் அவர்கள் தனிச்சட்டம் வேண்டும் எனக் கேட்டுக்
கொண்டார்கள். ஒரு கொலை நடக்கும் போது இனியொரு ஆணவக் கொலை வரை காத்திருப்பதா? தனிச்சட்டம்
இயற்ற ஏன் தயங்குகிறார்கள்? இதிலும் அரசியல் கணக்கு வேலை செய்கிறதா? என்றெல்லாம் கோபமுற்றிருக்கிறேன்.
இப்போது மனதுக்கு ஒரு ஆறுதலும் ஊக்கமும் கிட்டியிருக்கிறது. இதற்காக முதலமைச்சரை…
தவெக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
திமுக ஆட்சியில் நிதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் இதற்கென ஒரு
ஆணையம் அமைத்தார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆணையத்தின் முன் நானும்
சாட்சியமளித்திருக்கிறேன். எவிடென்ஸ் கதிர் அவர்கள் பாதிக்கப்பட்டோரை நேரில் அழைத்துக்
கொண்டு போய் அவர்கள் குரலைக் கேட்கச் செய்தார். நானும் உடன் இருந்திருக்கிறேன். இன்று
அமைச்சர் வன்னியரசு அவர்கள் ஆணையத்தின் பரிந்துரைக்கான கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளதைத்
தெரிவித்து… பரிந்துரை வந்தவுடன் தனிச்சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளார்.
திமுக அரசு அமைத்த ஆணையமென்றாலும் அதைத் தொடரச் செய்து அதன் தொடர்ச்சியாக
தனிச்சட்டம் கொண்டு வர முடிவெடுத்தது தவெக அரசின் முதலமைச்சரின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி, பெரியாரிய ,அம்பேத்கரிய , மார்க்சிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள்,
மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றன. எல்லோரும் இதை வரவேற்கிறார்கள்.
பாராட்டுகிறார்கள். தவெக அரசு… முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இதில் உறுதியாக இருந்து
நிறைவேற்றித் தர வேண்டும்’’ என கேட்டுள்ளார்.
நல்லதே நடக்கட்டும்.

