Share via:
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள்,
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் அரசியல் அசைன்மென்ட்
ஆக இருந்தது. இன்று அதனை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். திமுக அல்லது அதிமுக மட்டுமே
தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கணக்கு மாற்றி எழுதப்பட்டுள்ளது. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு
இந்த விஷயத்தில் மிகப்பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது.
அரசியல் பதவி ருசி கண்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள்
இனிமேல் திமுக மற்றும் அதிமுக பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். எனவே, எம்.ஜி.ஆர்.
போன்று விஜய் இருக்கும் வரையில் இந்த ஆட்சியை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது
என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு மந்திரி பதவி குறித்து மாணிக்கம் தாகூர்,
‘’1967 தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி வகித்த கடைசி காலம். மீண்டும்
ஆட்சியில் பங்கு பெற காங்கிரஸ் சுமார் 59 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த பல காலங்களிலும் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுக்கு பலமுறை துணைநின்றது. திமுகவும்
அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது.
குறிப்பாக 2006க்கு பிறகு திமுக (96) அரசு காங்கிரஸ் (38) ஆதரவில்தான்
செயல்பட்டது. 2009ல் இடதுசாரிகளும் பாமகவும் கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகும், காங்கிரஸ்
உறுதியாக நின்று அரசை நிலைநிறுத்தியது. ஆனால் இத்தனை ஆதரவுக்கும் பிறகும், காங்கிரஸுக்கு
ஆட்சியில் உண்மையான பங்கு வழங்கப்படவில்லை.
தவெக தலைவர் விஜய் மட்டும் தான் அன்று வெளிப்படையாக கூட்டணி ஆட்சி
மற்றும் கூட்டணி மரியாதை குறித்து பேசினார். மக்கள் பழைய ஒற்றைக் கட்சி ஆதிக்க அரசியலை
நிராகரித்து, அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தனர். இந்த வகையில் 59
ஆண்டுகளுக்கு பிறகு… மீண்டும் கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில்
அமர்கிறார்கள். அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு உணர்வு. ஒரு வரலாற்று தருணம்.
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மற்றும்
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி. விஸ்வநாதன் ஆகியோர் விஜய் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக
பொறுப்பேற்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும்
எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும்
காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியேற்பதை காண்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு.
இது தமிழ்நாடு காங்கிரஸின் ஒரு அரசியல் தருணம்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் கணக்குகள் மாற்றி எழுதப்படுகின்றன.