Share via:
நடிகை த்ரிஷாவை கூட்டிக்கொண்டு உலா வந்து தமிழக மக்களிடம் பெரும்
பரபரப்பை உண்டாக்கிய சம்பவத்துக்கு இணையாக ஜெகதீஷ் பழனிசாமியை தனிச் செயலாளராக நியமனம்
செய்து சம்பவம் செய்திருக்கிறார் முதல்வர் விஜய்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி
நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர்
ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், ‘முதல்வர் ஜோசப் விஜயின் தனிச் செயலாளராக (அரசியல்)
ஜெகதீஷ் பழனிசாமி கடந்த மே 12ம் தேதி நியமிக்கப்பட்டார். இது தொடர்பான நிபந்தனைகள்,
விதிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை ரூட் அமைப்பின் நிறுவனர்
ஜெகதீஷ் பழனிசாமி செய்து வருகிறார். விஜயின் சினிமா முதல் அரசியல் வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும்
மேலாக விஜயின் நிழலாகவும், அவரது மிக நெருங்கிய மேலாளராகவும் பயணித்து வருகிறார். தவெகவின்
தேர்தல் வெற்றிக்காகத் திரைமறைவில் உழைத்த ஜெகதீஷுக்கு தற்போது கோட்டையிலும் மிக முக்கிய
பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் வில்லங்க விவகாரம் என்னவென்றால் இந்த நியமனம் மே 12ம் தேதி
நடந்துள்ளது. அதாவது, மே 12ம் தேதி முதல்வரின் தனிச்செயலராக ஜெகதீஷ் பழனிச்சாமி நியமனம்
செய்யப்பட்டதற்கு, ஜூன் 22ஆம் தேதி பின்னிரவில் அரசாணை வெளியிடப்படுகிறது.
ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது
மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி
இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க
வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
விஜய் பிறந்த நாளையொட்டி ஜெகதீஷ் ஒரு பதிவு போடப்பட்ட பிறகே இந்த
தகவல் வெளியே வந்தது. இதையடுத்தே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதான் நேர்மையான, வெளிப்படையான அரசா சி.எம்.சார்..?