Share via:
விஜய் கட்சி தொடங்கிய நேரத்தில் அவருடன் சகாயம் ஐ.ஏ.எஸ். இணைந்து
செயல்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அதேநேரம், விஜய் போன்ற
புதிய நபர்கள் ஆட்சிக்கு வரவேண்டும், அப்போதுதான் ஆட்சியிலும் அரசியலிலும் மாற்றங்கள்
நிகழும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய் ஆட்சி அமைந்துவிட்டது. பெரம்பூர் மற்றும்
திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலுமே விஜய் அமோக வெற்றி பெற்றுவிட்டார். அதனால்
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருப்பது
உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், திருச்சி கிழக்கு தொகுதியில் அடுத்து தவெக சார்பில்
களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. நடிகை த்ரிஷா வேட்பாளராக நிறுத்தப்படுவார்
என்று சொல்லப்பட்டது. ஆனால், த்ரிஷாவை இப்போதே களத்தில் இறக்க விஜய் விரும்பவில்லையாம்.
அதேநேரம், முதல் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றே ஆகவேண்டும்
என்பதால் சிறந்த வேட்பாளர் ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர் மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர், நிர்வாகத் திறமை
வாய்ந்தவர், அதோடு எவ்வித அரசியல் கறையும் இல்லாத ஆளுமை என்பதால் சகாயத்தை நிறுத்த
விஜய் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இவரை நிறுத்தினால், எதிர்க்கட்சிகளின் பலத்த வியூகங்களையும்
எளிதில் முறியடிக்கலாம் என தவெக கணக்குப் போடுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி என்பது தவெக தலைவர் விஜய் நேரடியாக நின்று
வென்ற தொகுதி. விஜய் வென்ற தொகுதியை இடைத்தேர்தலில் வேறொரு வேட்பாளரை வைத்துத் தக்கவைப்பது
என்பது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான அக்னிப்பரீட்சை என்பதால்
சகாயமே பெஸ்ட் சாய்ஸ் என்கிறார்கள்.
பார்க்கலாம்.