Share via:
ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வர முயற்சி செய்த நேரத்தில், அவர் வருவது
திருமாவளவனுக்கு அசெளகர்யத்தை உண்டாக்கும் என்று சொல்லி தடுத்தார் அன்றைய முதல்வரும்
திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். இப்போது, தேர்தல் முடிந்த சூடு அணைவதற்குள் காங்கிரஸ்
பாணியில் திமுக கூட்டணிக்கு குட் பை சொல்லிவிட்டார் திருமாவளவன்.
இது குறித்து பேசியிருக்கும் திருமா, ‘’தேர்தலுக்கு முன், என்னை
துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல முனைகளில் இருந்தும்
முயற்சித்தனர்… ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்தவிடமாட்டேன் என உறுதியாக நின்று
அதனை நடத்தியும் காட்டினேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் வலிமை
எனக்கு இல்லை… காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை
இல்லை… முஸ்லீம் லீக் நிலைப்பாட்டில் நான் தலையிட முடியாது… ஆனால் சமூக வலைதளங்களில்
என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணைகளை ஏவுவது ஏன் என்று தெரியவில்லை…
நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது நான்
அதற்கு இணங்கவில்லை… அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை
பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்… திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நீடிக்க
வேண்டும் என்பதற்காக என்னாலான முயற்சிகளை செய்தேன்… தேர்தல் நேரத்தில் தான் யாருடன்
பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம்…’’ என்று கூறிவிட்டார்.
இனியாவது எதிரிகளும் துரோகிகளும் இல்லாமல் திமுக தனித்து நிற்க
வேண்டும் என்று உடன்பிறப்புகள் கொதிக்கிறார்கள். நாகரிக அரசியல் சரிப்படாது, துரோகிகள்
மீது கடும் விமர்சனம் வைக்கவேண்டும் என்கிறார்கள்.
என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்..?
