Share via:
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த காளியம்மாளை கட்சியில்
இணைத்துக்கொள்வதற்கு அதிமுக விருப்பமாக உள்ளன. ஆனால், அவரை இணைத்துக்கொள்வதன் மூலம்
சீமானுடன் தேவையில்லாத பகை வரலாம் என்பதால் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறார்கள்.
ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல் தனித்து இருப்பது காளியம்மாளை
சோர்வடைய வைத்துள்ளது. அதனாலே, வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுகவினர் காளியம்மாளுக்குத் தூண்டில் போடுகிறார்கள். அதாவது, தனிக்கட்சி
தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்வதாக சொல்லி வருகிறார்கள். இதன் மூலம் சீமானுக்கு
நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தை காளியம்மாள் தீவிரமாக ஆலோசித்துவருகிறார்.
நேற்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள்
விழாவில் பங்கேற்ற காளியம்மாள், “பெண் சுதந்திரம் என்று பேசிக் கொண்டிருக்கும்
வேளையில், நம் வீட்டில் நாம் எப்படிப் பெண்களை நடத்துகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது.
ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுகிறார்கள்,
தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க அரசியலை மேம்படுத்திக் கொள்ள வருகிறார்கள். ஆனாலும், ‘ஒரு
பெண் இவ்வளவுதான் செய்ய வேண்டும்’ என்ற கட்டுப்பாடாக இருக்கட்டும், இதைத் தாண்டி யோசிக்கக்
கூடாது என்ற நிலைப்பாடாக இருக்கட்டும் – இது வீட்டிலிருந்து தொடங்கி நாடு வரை அப்படித்தான்
உள்ளது என்ற வலியோடுதான் எங்கள் வார்த்தைகள் வருகிறது.
என்னுடைய அரசியல் பயணம் மக்களுடன் சேர்ந்தே இருக்கும். சட்டமன்றத்
தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். மக்களின்
பிரதிநிதியாக நிற்பேன். கட்சி ஆரம்பிப்பது, ஒரு கட்சியில் இணைவது குறித்த முடிவை ஒருநாள்
சொல்வேன்.” என்று பேசியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி ஓர் ஆண்டு ஆகிவிட்டதாலும் தேர்தல்
நெருங்குவதாலும் இன்னும் சில நாட்களில் தன்னுடைய முடிவை வெளிப்படையாக அறிவிப்பார் என்பது
தெரிகிறது.